Politics

“அமைச்சர் சொல்வது ஒன்று; காவல்துறை தகவல் வேறு; எதுதான் உண்மை?” - ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தியாகராய நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் பேசினார்.

அப்போது பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “கடந்த 23ம் தேதி குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து சென்னையில் பேரணி நடத்தினோம். அதில் கலந்துகொண்ட 8,000 பேர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அமைச்சர்கள் சிலர் போராட்டத்தில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறினர். அப்படியானால் எது உண்மை?

லட்சக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. மத்திய, மாநில உளவுத் துறையினர் அரசுக்கு கொடுக்கும் அறிக்கையில் எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி என்றால் எண்ணிக்கையை குறைவாக சொல்வதும், ஆளுங்கட்சி நடத்தும் பேரணி என்றால் எண்ணிக்கையை அதிகமாகச் சொல்வதும் வழக்கமாகிவிட்டது.

போராட்டங்களில் ஈடுபடும் எங்கள் மீது எவ்வளவு வழக்கு போட்டாலும் சந்திப்போம். குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களை இணைத்து போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: “மார்க்சிய தத்துவத்தின் மனித உருவம் தோழர் நல்லகண்ணு” - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!