Politics

“அரசியலமைப்பை பற்றி மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ஒரு கவலையுமில்லை” - சோனியாகாந்தி தாக்கு!

பா.ஜ.க அரசால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சீரழிவுகளைக் கண்டித்து ‘தேசத்தை காப்போம்’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, “மோடி என்கிற குழப்பவாதியின் கையில் சிக்கி நாடு மோசமான நிலையில் உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், அணைவருக்குமான வளர்ச்சி (sabka sath sabka vikas) எங்கே என ஒட்டுமொத்த நாடும் கேட்கிறது.

பொதுத்துறை வங்கிகளில் கூட பொதுமக்கள் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன. நாடு இருண்டகாலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

குடியுரிமை மசோதா என்பது நாட்டின் ஆன்மாவையே சிதைத்துவிடும். இதற்கு எதிராக அனைவரும் போராடவேண்டும். அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. நாட்டைக் காக்க அனைவரும் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம்.

குடியரசுத்தலைவர் ஆட்சியை ரத்து செய்வது, மசோதாக்களை விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றுவது என பிரதமர் மோடியும், அமித்ஷாவும், மனம் போன போக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தையும், அரசியல் சாசன அமைப்புகளைப் பற்றியும் மோடியும், அமித்ஷாவும் கவலைப்படுவதில்லை. அவர்களது ஒரே இலக்கு உண்மையான பிரச்னைகளை மக்களிடமிருந்து மறைத்து மக்கள் மத்தியில் கலவரத்தை உண்டு பண்ணுவதுதான். மத்திய பா.ஜ.க அரசு, தினமும் அரசியலமைப்பை மீறிச் செயல்படுகிறது. பின்னர், அவர்களே அரசியலமைப்பு தினத்தையும் கொண்டாடுகின்றனர்'' எனத் தெரிவித்தார்.

Also Read: “மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி” - மோடிக்கு எதிராக முழங்கிய ராகுல்!