Politics

“எடப்பாடி சொன்ன இருமொழிக் கொள்கை இதுதானா?” - உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

1956 நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ் மாநிலம் என்ற உரிமை பெறப்பட்டது. அந்த மெட்ராஸ் ஸ்டேட் பின்னர் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றமும் பெற்றது.

தமிழ் மொழியை வீழ்த்தும் நோக்கில் இந்தி திணிக்கப்பட்டபோதெல்லாம் தி.மு.கழகம் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இந்தி திணிப்பை எதிர்த்துப் போரிட்ட கள வீரர்கள் ஆயிரமாயிரம். இத்தனை பாடுகளுக்குப் பிறகு இப்போதும் இந்தி திணிப்பை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க.

கல்வி, அலுவலகங்கள் என அனைத்திலும் இந்தித் திணிப்பு முயற்சியைக் கையாண்டு வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. இந்நிலையில், போக்குவரத்து போலிஸார் வழங்கும் ஒப்புகைச் சீட்டில் தமிழ் தவிர்க்கப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இருமொழிக் கொள்கை என முதல்வர் சொன்னது இந்தியையும் ஆங்கிலத்தையும் தானா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. அவரது பதிவு பின்வருமாறு :

“மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழக அமைப்புநாளான நேற்று, போக்குவரத்து போலிஸார் வழங்கிய ஒப்புகைச் சீட்டில் தமிழைக் காணவில்லை. ‘இந்தியே தேசியமொழி’ என அமித்ஷா பேசியபோது, ‘இருமொழி கொள்கையை கடைபிடிக்கிறோம்’ என்றார் முதல்வர். அந்த இருமொழி என்பது இந்தி-இங்கிலீஷே என சொல்லாமல் விட்டது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.