File image
Politics

“நிறைய ஊழல்கள் நடந்திருப்பதற்குத்தான் ஐஎஸ்ஐ முத்திரை” - எடப்பாடி பழனிசாமி ஆட்சியை சாடிய மு.க.ஸ்டாலின்!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டிம், ஏழுசெம்பொன் ஊராட்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “இந்த ஏழு செம்பொன் பகுதியில் யாரும் புகை பிடிப்பதில்லை; குடிப்பதில்லை என்ற மிகப்பெரிய பெருமை உள்ளது. ஒரு கிராமமே இவ்வளவு கட்டுக்கோப்பாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இப்பகுதி மக்களுக்கு பாராட்டுகள்.

இந்தப் பகுதியில் குடிநீர் பிரச்னை, பள்ளிக் கட்டிட சீர்கேடு பிரச்னை, மருத்துவமனை பிரச்சனை, முதியோர் உதவித்தொகை கொடுப்பதில் பிரச்னை, 100 நாள் வேலைத்திட்டம் முறையாக கொடுப்பதில்லை, அப்படியே கொடுத்தாலும் அவருக்கான ஊதியத்தை முறையாக வழங்குவதில்லை, இப்படி பல்வேறு பிரச்சினைகள் விக்கிரவாண்டியில் மட்டும் நாங்குநேரியில் உள்ளது.

விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச மின்சாரம் வழங்கியது தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் தான். அதேபோல் விவசாயிகளின் கடன்களை 7,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ததும் தலைவர் கலைஞர்தான்.

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, 33% இட ஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தந்தது கலைஞர் தான். மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க தான்.

File image

தற்போது நடைபெறும் அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல், சுகாதாரத் துறையில் ஊழல், கொலை கொள்ளை என அதிகரித்துள்ளது. கற்பழிப்பு, பாலியல் வல்லுறவு, செயின் பறிப்பு போன்றவைதான் தற்போது பத்திரிகையில் செய்திகளாக வருகிறது.

பொள்ளாச்சி பகுதியில் 8 வருடங்களாக பெண்களை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சம்பந்தப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகத் தெரிவிக்கிறார். இந்த ஆட்சிக்கு ஐஎஸ்ஐ முத்திரை கிடைத்து இருப்பதாக தெரிவிக்கிறார். இந்த ஆட்சியில் நிறைய ஊழல் நடந்திருப்பதற்கு ஐஎஸ்ஐ முத்திரை கொடுத்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, எடுபிடி பழனிசாமியாகவே செயல்படுகிறார். மத்திய அரசுக்கு ஆதரவாக ஒரு மக்கள் விரோத அரசாக செயல்படுகிறார். நாட்டைக் காப்பாற்றவும், வீட்டைக் காக்கவும் தி.மு.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.