Politics

“அரசியல் தெரிந்தவர்களுக்கு கரைவேட்டியின் அருமை தெரியும்” : கமல்ஹாசன் பேச்சுக்கு கனிமொழி பதிலடி!

நெல்லை களக்காட்டில் நடந்த தேர்தல் காரியாலய திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் கனிமொழி.

அப்போது பேசிய அவர், “தேர்தல் என அறிவித்ததும், நாங்குநேரி தொகுதிக்கு தமிழக அமைச்சர்கள் 18 பேர் முகாமிட்டுள்ளனர். இதுவரை மக்கள் பிரச்னையை தீர்க்க எத்தனை அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள் என கூறமுடியுமா என கனிமொழி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மரியாதையை, தொன்மையை மறக்கும் அளவிற்கு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழர்களின் பெருமையைச் சொல்லக்கூடிய அகழ்வாராய்ச்சி என்று கூறாமல், பாரதத்தின் பெருமையை சொல்லக்கூடிய அகழ்வாராய்ச்சி என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இந்த ஆட்சிக்கு மக்கள் வருகிற தேர்தல் மூலம் மீண்டும் சரியான பாடம் புகட்டுவார்கள்.

கரை வேட்டிகளால் தமிழகத்தில் கறைபடிந்துள்ளதாக கமல்ஹாசன் பேசியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலில் திடீர் திடீரென வந்து புதிய கருத்துகளைக் கூறும் அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றும், தமிழகத்திற்கு வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இருக்கக்கூடிய பெருமை உள்ளதென்றால் அதற்கு தி.மு.க எனும் பேரியக்கமும், கரை வேட்டி கட்டிய கலைஞர் என்ற தமிழர் உருவாக்கிய பெருமைதான். அதனை யாரும் மறுத்துவிட முடியாது. அரசியல் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்” என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.