Politics
கொள்கை நிலைப்பாடற்ற அ.தி.மு.க எம்.பி.க்கள்: முத்தலாக் தடையை சீனியர் எதிர்க்க ஜீனியர் ஆதரித்ததால் குழப்பம்
இஸ்லாமிய ஆண் தன் மனைவியிடம் ‘தலாக்’ என 3 முறை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை மசோதா (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியது.
இதையடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் முத்தலாக் தடை மசோதாவை அவசர சட்டமாக மத்திய அரசு நிறைவேற்றியது. தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதால், இந்த முத்தலாக் தடை சட்ட மசோதா காலாவதியானது. இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
முத்தலாக் தடை மசோதா குறித்து மக்களவையில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் மற்றும் எம்.பி. ரவீந்திரநாத் குமார், ”முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இதுபோன்ற சட்டங்கள் இஸ்லாமிய பெண்கள் மட்டும் இல்லாமல் அனைத்து மத பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பழங்காலத்தில் இருந்தே மகளிருக்கு சம உரிமை இல்லாத நிலையில், இந்த மசோதா அதனை பெற்றுத்தர வழி வகுக்கும். மகளிருக்கு சமநிலை கிடைக்க உதவும் என்பதால் இந்த மசோதாவை அ.தி.மு.க ஆதரிக்கிறது என தெரிவித்தார்.
கடந்தாண்டு முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது அ.தி.மு.க எம்.பி., அன்வர் ராஜா முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து கடுமையாக பேசி இருந்தார். முத்தலாக் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல, இறைவனுக்கே எதிரானது என்று அப்போது கூறியிருந்தார். தற்போது முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக உறுப்பினரான ரவீந்திரநாத் குமார் ஆதரவு அளித்துள்ளதன் மூலம் அ.தி.மு.க எம்.பி.க்கள் கொள்கை நிலைப்பாடின்றி செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!