Politics

“எப்படி என் ரைமிங்கு” Democracyக்கு டி.ஆர் ஸ்டைலில் விளக்கம் கொடுத்த ஓ.பி.ரவீந்திரநாத்

மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பொதுவாக, ஒன்றை ஒன்று விட்டுக் கொடுக்காமல் பேசுவது இயல்புதான். ஆனால், “மோடி தான் எங்கள் டாடி” ,“ நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது”, ” தேசத்தின் பாதுகாவலர் மோடி” என பா.ஜ.க அரசுக்கு அ.தி.மு.க கொஞ்சம் ஓவராகவே முட்டுக் கொடுத்து வருகிறது.

அதன் அடுத்த கட்டத்திற்கு சென்று அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் குமார் மத்திய பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தில் முரட்டு முட்டு கொடுத்திருப்பது கட்சித் தொண்டர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

பா.ஜ.க அரசு ஆட்சி செய்த கடந்த 4 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து 900 கோடி ரூபாய் அளவுக்கு, அக்கட்சி நன்கொடையாக பெற்றுள்ளது. அதற்கு கைமாறு செய்யும்படியாகவே அமைந்திருக்கிறது இந்த பட்ஜெட்.

சாமானிய மக்கள் குடும்ப பட்ஜெட்டில் பெரும் துண்டு போடும் பெட்ரோல் டீசல் எரிபொருட்கள் மீதான கலால் வரியை ஒரு ரூபாய் வரை உயர்த்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

தங்கம் மீதான சுங்க வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டால் இந்திய மக்களுக்கு எந்த உறுப்படியான பயனும் இல்லை என்பதே எதிர்க்கட்சிகளின் கருத்தாக உள்ளது. இது ஒரு சோடை போன பட்ஜெட் என உறுதி செய்யும் வகையில் பங்குச் சந்தையும் சரிந்தது.

இத்தனையையும் தாண்டி ஓ.பி.ரவீந்திரநாத் இந்த பட்ஜெட்டை புகழ்ந்து பேசி பா.ஜ.க கூடாரத்தை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அதுசரி துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ஆயிற்றே, அவருக்கு இந்த டெக்னிக் பற்றி சொல்லிக் கொடுக்கவா வேண்டும். அந்த அளவுக்கு மனசாட்சியே இல்லாமல் புகழ்ந்திருக்கிறார். அதிலும் Democracy (ஜனநாயகம்) என்ற வார்த்தைக்கு பட்ஜெட்டை வைத்து ஒரு விளக்கம் கொடுத்ததில் மக்களவையே ஆடிப்போனது.

அது என்ன என்று கேட்கறீர்களா :

மோடி சிறந்தவர், வல்லவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்றெல்லாம் புகழ்ந்துவிட்டு,

D - Development Budget

E - Enormous Budget

M - Modernization Budget

O - Organized Budget

C - Corruption Free Budget

R - Revolutionary Budget

A - Associated Budget

C - Cultural Budget

Y - Young Budget என்று பேசி இருக்கிறார் ரவீந்திரநாத். அப்போது மக்களவையில் சிரிப்பொலி எழுந்தது. இதனையடுத்து அனைவரையும் சாதனைப் பெருமிதத்தோடு பார்த்துவிட்டு அமர்ந்த ஓ.பி.ஆரை மற்ற எம்.பி.,க்கள் வித்தியாசமாகப் பார்த்தனர்.

ரைமிங்கிற்கு புகழ்பெற்ற டி.ராஜேந்தர் போல் பேசினால் எடுப்பாக இருக்கும் என்று இப்படி ஒரு விநோத விளக்கத்தை கொடுத்திருக்கிறார். ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் இந்த பேச்சைக் கேட்டு மோடியே கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறாராம். ஆனால், அவரது பேச்சை கேட்ட நெட்டிசன்கள், ‘ரைமிங்கும் தப்பு ; டைமிங்கும் தப்பு’ என்று கிண்டல் அடித்து வருகிறார்கள்.