Politics

கர்நாடக ஆளும் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக முதலமைச்சரின் மகன் நிகில் குமாரசாமி நியமனம் !

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி அமைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் இளைஞரணி தலைவராக, முதலமைச்சர் எச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் நடைப்பெற்று முடிந்த, மக்களவை தேர்தலில் ஜே.டி (எஸ்) மற்றும் அதன் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கட்சியில் பல நிர்வாக மாற்றங்கள் நடத்தப்பட்டது. அதன்படி, ஜே.டி.எஸ் கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். எச்.விஸ்வநாத் பதவி விலகிய ஒரு மாதத்திற்குப் பிறகு, சட்டமன்ற உறுப்பினர் எச்.கே.குமாரசாமியை கட்சியின் மாநில தலைவராக நியமித்தார் அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா.

மேலும், முன்னாள் முதலமைச்சர் எஸ்.பங்கரப்பாவின் மகன் மது பங்கரப்பாவை, கட்சியின் செயல் தலைவராகவும், இளைஞர் அணித் தலைவராக முதலமைச்சரின் மகன் நிகில் குமாரசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா ”முன்னாள் தலைவர் ஏ.எச்.விஸ்வநாத், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அதனால், ஐந்து முறை எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் எச்.கே.குமாரசாமியை மாநிலத் தலைவராக நியமித்துள்ளேன் என்றார். மேலும், மது பங்கரப்பா, ஒரு உறுதியான உழைப்பாளி அதனால்தான் அவரை செயல் தலைவராக நியமிக்க கட்சி முடிவு செய்தது என்றார்.

நிகிலின் நியமனம் குறித்து தேவேகவுடா கூறுகையில், '' ஷரனகவுடா தொகுதி இளைஞர் பிரிவு தலைவராக நியமிக்க கட்சி ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தது, ஆனால் அவர் அந்த பதவியை ஏற்க மறுத்து, பொறுப்பை நிகிலுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொண்டர்களின் கருத்தை ஏற்று கட்சி அவரை இளைஞரணி தலைவராக நியமித்துள்ளது'' என்றார்.

இதையடுத்து கட்சித் தலைவர்கள் நிகிலுக்கு மைசூரு தலைப்பாகையை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.