Politics
வெற்றிக்குப் பிறகும் மதவெறி, சாதிவெறி, தூண்டும் பா.ஜ.க - முத்தரசன்
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பேராதரவு தந்து 38 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்து முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த வெற்றிக்காக கடும் உழைப்பைச் செலுத்திய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
சட்டப்பேரவையில் 22 காலியிடங்களுக்காக நடந்த இடைத் தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்றிருந்த திருவாரூரைத் தவிர, மற்ற 21 தொகுதிகளும் முன்பு அ.தி.மு.க வென்றவையாகும். அவற்றிலும் 13 தொகுதிகள் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் மாநில நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டதையும், அதைக் கண்டிக்கும் வகையில்லாமல் மாநில அரசு கைகட்டி நின்றதையும் மக்கள் நேரடியாகக் கண்டு உணர்ந்திருக்கிறார்கள். காவிரி நீர் பங்கீடு முதல் ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, எட்டுவழிச் சாலை வரை மக்களோடு நின்று தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போராடி வந்துள்ளது. எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெளிவாக முடிவு செய்துள்ளார்கள்.
பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதற்காக மதவெறி, சாதிவெறி, பணவெறியைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட சந்தர்ப்ப வாதக் கூட்டணியை சரியாக அடையாளாம் கண்டுள்ளனர். பாரதிய ஜனதாவின் வேட்பாளர்களையும், அக்கட்சியோடு கூட்டணி வைத்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் படுதோல்வி அடையச் செய்துள்ளனர்.
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமைவது நாட்டைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கும். ஏற்கனவே ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் அமைப்புகளை எல்லாம் அது சிதைத்துவிட்டது. மக்களின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகச் சொல்லி சர்வாதிகாரப் பாதையில் மேலும் தொடர்ந்து செல்லும்.
இதனால் ஏழை, எளிய மக்கள் முதல் நடுத்தர வகுப்பினர், உள்நாட்டுத் தொழில் முனைவோர் வரை கடும் பாதிப்புக்கு ஆளாவர். இத்தருணத்தில், ஒற்றுமையைப் பலப்படுத்தி, உரிய நேரங்களில் போராடி அரும்பாடுபட்டுப் பெற்ற விடுதலையையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!