Politics

தி.மு.க.,வின் பெருவெற்றி மூலம் வைகோ மீதான சமூகவலைதள கிண்டலுக்கு முற்றுப்புள்ளி 

வைகோ இடம்பெற்ற பல தேர்தல்களில் கூட்டணி தோல்வியையே தழுவியுள்ளன. அதனால், வைகோ இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறாது என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடிக்கப்பட்டு வந்தது.

2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் வைகோ இடம்பெற்றிருந்தார். அந்த தேர்தலில் அக்கூட்டணி தோல்வியை தழுவியது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நலக்கூட்டணியில் வைகோ இடம்பெற்றிருந்தார். அந்த தேர்தலில் மக்களை நல கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியது. அப்போதும் அந்தத் தோல்விக்கு வைகோ தான் காரணம் என்று சமூக வலைத்தளவாசிகள் கிண்டலும் கேலியும் செய்தார்கள்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இடம்பெற்றது.`ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன்’ என்று வைகோ சூளுரைத்தார். இருப்பினும் வழக்கம்போல சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.

ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த வெற்றியின் மூலம் வைகோவுக்கு எதிரான கிண்டல்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க.,வை அரியணையில் ஏற்றுவேன் என்று வைகோ சூளுரைத்தார். அதேநேரம் மதவாத சக்திகளிடம் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க தி.மு.க மட்டுமே நமது ஒரே கவசம் என்றும் வைகோ குறிப்பிட்டு இருந்தார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினைச் சந்தித்த வைகோ, அவரை ஆரத்தழுவி வாழ்த்துச்சொன்ன காட்சி உருக்கமாக அமைந்தது. அப்போது அவர் பேசுகையில், தமிழகம் எப்போதும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்று குறிப்பிட்டார்.