Politics

“மோடி அரசு ஒரு மூழ்கும் கப்பல்; அதை ஆர்.எஸ்.எஸ்ஸே கைவிட்டுவிட்டது” - மாயாவதி விளாசல்!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “மோடி அரசு ஒரு முழ்கும் கப்பல்; அந்தக் கப்பலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கைவிட்டுவிட்டது” என ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மே 19-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது தேர்தல் பரப்புரைகளில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். இன்று, மோடி குறித்து ட்விட்டரில் விமர்சித்துள்ளார் மாயாவதி.

“மோடி அரசு ஒரு முழ்கும் கப்பல். அந்தக் கப்பலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கைவிட்டுவிட்டது. பொய்யான தேர்தல் வாக்குறுதிகளும், மக்களின் எதிர்ப்பும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை அதிருப்தியடையச் செய்துவிட்டது. இதனால், மோடி பதட்டமாக இருக்கிறார்” என ட்விட்டரில் விமர்சித்துள்ளார் மாயாவதி.

தேர்தல் பரப்புரையின்போது, “தேர்தல் பிரசாரங்களின் போது, தலித்துகள் மீது தனக்கு அக்கறை இருப்பது போல மோடி காட்டிக் கொள்கிறார். ஆனால், அவருக்கு உண்மையில் அப்படி ஒரு அக்கறையும் இல்லை. தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளின் போது அவர் அமைதி காத்தவர். அரசியல் ஆதாயத்துக்காக தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார் பிரதமர்” என்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.