Politics

பெரியார் மட்டும் தான் நகல் எடுக்க முடியாத அசல்! - வைரமுத்து புகழாரம்!

தந்தை பெரியார் குறித்து வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து,தி.க தலைவர் வீரமணி,பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது, "ஒரு பெரியாரை போல இன்னொரு பெரியாரை எழுத முடியாது.பெரியார் மட்டும் தான் நகல் எடுக்க முடியாத அசல். இந்த தமிழாற்றுப்படைக்காக நான் பலவற்றை இழந்தேன்.பலர் என் மீது இழிச்சொல்களை கூறினார்கள், அம்பு எய்தினார்கள். தமிழாற்றுப்படைக்காக தான் இதை சந்தித்தேன். தமிழ் பகுத்தறிவு என்னோடு உள்ளது.அரங்கேற்றத்தை கேட்க திமுக தலைவர் கலைஞர் இல்லை என்று கண்கலங்கி பேசினார்.

என் மீது விழுந்த பழிச்சொல்லை தாங்கி நிற்க காரணம் பெரியார் தான். பொதுமானம் பார்ப்பவன் தன் மானம் பார்க்க மாட்டான்.பெரியார் இன்னும் உயிரோடு இருக்கிறார், இருப்பார் மற்றும் இருக்க வேண்டும்.பெரியாரை பிராமண எதிர்பாளர், கடவுள் மறுப்பாளர் என கருதுபவர்கள் அவரை கண்ணை மூடி கொண்டவர்கள் தான். யானை அசைவை தோற்றம் கண்டு முடிவெடுக்க முடியாது.

அவர் துறவி, இவர் துறவி என்கிறார்கள்.அரசியலை துறந்த ஒரு சமூக துறவிதான் பெரியார்.தமிழ் பழமையான மொழி.பழமைவாதம் மட்டும் போதாது என்று கருதினார் பெரியார். அதனால் தான் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார்.

தமிழ் ஆயுதம் ஆக வேண்டும் என்கிற ஆசை பெரியாருக்கு இருந்தது.தமிழ் பண்பாட்டுக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் இந்தி திணிப்பை பெரியார் எதிர்த்தார்.காந்தி கொல்லப்படுவார் என அவரிடமே சொன்ன தொலைநோக்கு பார்வையாளர் பெரியார்" என்று கூறினார்.