உணர்வோசை

குடும்பம் அல்லது காதல்.. இரண்டிலும் Competitive Skill-ஐ கொண்டு வராமல் தவிர்ப்பது எப்படி?

பெண்ணுக்கு கசிந்துருகுதலும் ஆணுக்கு காதல்சார் வீரமும் முன்வைக்கப்பட்ட காலம் அது.

மதக் கோட்பாடுகளால் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் காதலுக்கான பொதுத்தன்மையாக 'தன்னையே இழத்தல்' இருந்தது. ஷேக்ஸ்பியர் எழுத்துகளில், குறிப்பாக ரொமியோ ஜுலியட்டில் நாம் அத்தன்மையை காண முடியும். நம்மூரில் ஆண்டாள் புராணம் போன்றவை அத்தகைய பின்னணியில் எழுதப்பட்டவை எனக் கொள்ளலாம்.

ஓரளவுக்கு நிலப்பிரபுத்துவ நிறுவனங்கள் சமூகத்தில் நிலைபெறத் துவங்கிய போது, பெண்ணுக்கு காதல் 'அரவணைப்பு' என்றும் ஆணுக்கு காதல் 'பாதுகாப்பு' என்றும் மாறியது. அதாவது காதலுறவில் ஆணிடம் பெண் பாதுகாப்பை தேடுவாள். பெண்ணிடம் ஆண் அரவணைப்பை தேடுவான். அந்த பாதுகாப்பு மற்றும் அரவணைப்பு ஆகியவை 'சொத்து வேண்டும்' என்பதற்கான சமூகவியல் வார்த்தைகள் என புரிக.

பிறகு முதலாளித்துவத்தை நோக்கி நகரும் யத்தனிப்புடன் கூடிய சமூகச்சூழல் நேர்ந்தது. காதலுக்கான தன்மையும் காதலில் ஆண் மற்றும் பெண்ணுக்கான தேவைகளும் மாறின. அழகு, settled life, இளமை, அதிக ஊதியம், விசுவாசம் போன்றவை இரு தரப்பின் தேவைகளாகவும் மாறத் தொடங்கின.

பிறகு நாம் இருக்கும் கார்ப்பரேட் மூலதன வாழ்க்கைமுறை. இங்கு காதலுக்குள் போட்டி, பந்தயம் போன்றவையும் சேர்ந்து இடம்பெறுகின்றன.

இன்றைய சூழலில் வெறுமனே சம்பாதிப்பது மட்டும் காதலர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. அதிக சம்பாத்தியம் தேவைப்படுகிறது. அதிக சம்பாத்தியத்தை ஒருவர் பெறுகையில் அடுத்தவருக்கு தன் மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது.

இது corporate சிந்தனைமுறையின் விளைவு. Corporate-ல் competitive skill என சொல்வோமே, அதையே நம் மனம் குடும்பத்திலும் காதலுறவிலும் apply செய்து பார்க்கிறது.

நான் BPO-வில் பணிபுரிந்தபோது நாங்கள் பேசும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் முடிந்தவுடன், எங்களுடன் பேசியவருக்கு ஒரு survey மின்னஞ்சல் செய்யப்படும். அதற்கு பெயர் customer satisfaction survey. இன்றைய swiggy, zomato-வில் போடும் ஸ்டார் ரேட்டிங்கின் ஆரம்ப வடிவம் என வைத்துக் கொள்ளுங்களேன். அந்த சர்வேயில் பத்து கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 1லிருந்து 10 வரை மதிப்பெண் தரலாம். 10 என்பது நல்ல மதிப்பெண். 1 என்பது மோசமான மதிப்பெண். 5 மதிப்பெண்ணை கடக்கும் கேள்விகளுக்கு ஒரு பாயிண்ட் வழங்கப்படும்.

அழைப்பை பேசி முடித்ததும் அனுப்பப்படுகிற மின்னஞ்சலை வாடிக்கையாளர் நிரப்பி அனுப்புவார். ஐந்து பாயிண்ட்கள் just pass. அதற்கு கீழ் போனால் மேனேஜர் அழைத்து பேசுவார். மீண்டும் பயிற்சிக்கு ஊழியர் அனுப்பப்படுவார். இரண்டு முறை பயிற்சிக்கு அனுப்பப்பட்டு வந்த ஊழியருக்கு மூன்றாம் முறையும் ஐந்து பாயிண்டுக்கு குறைவாக சர்வே முடிவு வந்தால், poor performance என தீர்மானிக்கப்படும். வேலை பறிக்கப்படும் அல்லது சம்பளம் குறைக்கப்படும் அல்லது ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும்.

வேறு வழியின்றி நாங்கள் எங்களின் மனித இயல்புகளை புதைத்துக் கொண்டு கோபமாய் திட்டும் வாடிக்கையாளரிடம் புன்னகையுடன் பேசுவோம். நாம் சொல்லும் troubleshooting steps செய்யாமல் இழுத்தடிக்கும் வாடிக்கையாளரிடம் எரிச்சல் ஏற்படாமல் பேசுவோம். ஒவ்வொரு அழைப்பின் முடிவிலும் அனுப்பப்படும் சர்வேயில் நல்ல மதிப்பெண்கள் அளிக்கும்படி கெஞ்சிக் கூத்தாடி அழைப்பை துண்டிப்போம்.

கார்ப்பரேட் உலகில் உங்களின் தலைக்கு மேல் எப்போதுமே கத்தி தொங்கிக் கொண்டிருக்கும். எப்போதும் உங்களின் வேலைக்கு உத்தரவாதம் இருக்காது. நிறுவனம் unrealistic-காக கொடுத்திருக்கும் கடமைகளை நீங்கள் எப்பாடுபட்டேனும் பூர்த்தி செய்தாக வேண்டும். அதில் எது தப்பினாலும் உங்களின் இடத்துக்கு இன்னொருவர் கொண்டு வரப்படுவார். அப்படி அநாமத்தாக வேலை பறிக்கப்படுவதை நீங்கள் கேள்வி கூட கேட்க முடியாது. கேட்டால் poor performance, no competitive skill, 'metrics meet பண்ணல' என உங்கள் வேலை பறிபோனதற்கு நீங்கள்தான் காரணமென நம்ப வைக்கும் பட்டியல் ஒன்று வாசிக்கப்படும்.

இப்படி 'தனித்திறன்' அல்லது 'competitive skill' என்கிற கற்பனையான விஷயத்துக்கு பின் ஓடுவதில் நம் மீதான நம்பிக்கை நமக்கு அற்று விடுகிறது. நமக்குள் இருக்கும் அற்புதமான மனித ஆற்றல் metrics-க்குள் வராததால்தான் நாமே நம்மை நம்புவதில்லை. விளைவாக வாழ்க்கையின் எதையும் competitive skill-டன் அவதானிக்கும் சிந்தனை நமக்குள் உருவாக்கப்பட்டு விடுகிறது.

திருமணமோ காதலுறவோ competitive skill அல்லது metrics எதிர்பார்த்தெல்லாம் உருவாவதல்ல. இணையரின் திறமைக்கு ஈடு கொடுப்பது போல, அவரின் அறிவுக்கு இணையாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் இங்கு இல்லை. இணையரிடம் யாரும் survey அனுப்பப்போவதில்லை. ஸ்டார் ரேட்டிங் கேட்கப்போவதில்லை.

Competitiveness-ஐ தாண்டி ஒரு மெல்லிய vulnerable இழைதான் இருவரையும் இணைத்திருக்கும். அந்த vulnerability இருவருக்குள்ளும் இருக்கும். அதை இருவரும் இருவரிடம் மட்டும்தான் பகிர விருமுவார்கள்; பகிர்வதற்கான comfort-ம் இருக்கும். எனவே காதலை நாம் கார்ப்பரேட் நிறுவனமாக யோசிக்க வேண்டிய தேவையில்லை.

இவற்றை தாண்டி இணையர் மீது நமக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அது நிறைவேறாமல் போகலாம். அதில் ஏமாற்றமும் கோபமும் கூட இருக்கலாம். ஆனால் அதற்காக வேலையில் இருந்து தூக்கப்படுவது போல் பிரிந்து செல்லும் வாய்ப்பு இல்லை. அப்படி பிரிவதென்றாலும் கூட அது தீர்ந்து போன காதல், ஆதிக்கம், ஒடுக்குமுறை, அக்கறையின்மை, கள்ளம், பாரபட்சம் போன்றவற்றால்தான் நேரும்.

Also Read: காதல் பற்றி தெரிந்த உங்களுக்கு லவ் ஹார்மோன் குறித்து தெரியுமா?.. எப்போது இதை நம்மால் உணர முடியும்?