உணர்வோசை

உயிர்கள் பிறப்பை காலநிலை ஆர்வலர்கள் தயக்கத்தோடு பார்ப்பது ஏன் ? குழந்தைகளின் எதிர்காலம்தான் என்ன ?

சில வருடங்களுக்கு முன் Capernaum என ஒரு படம் வந்தது. லெபனான் நாட்டுப் படம். ஒரு சிறுவன்தான் நாயகன் பாத்திரம். கதை அடிப்படையில் Anti Natalism கதை. அதாவது பொறுப்பின்றி குழந்தைகளாக பெற்றுக் கொண்டிருக்கும் பெற்றோர் மீது, ‘ஏன் தனது அனுமதியின்றி தன்னைப் பெற்றார்கள்’ என அச்சிறுவன் வழக்கு தொடுப்பதே கதை. அடிப்படையில் Anti Natalism இதுதான்.

18ம் நூற்றாண்டில் மக்கள்தொகை பெருக்கம் குறித்த அச்சமாக Anti Natalism சிந்தனை கருக்கொண்டிருந்தது. மக்கள்தொகை அதிகரிக்கும்போது உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என மால்துஸ் எச்சரித்தார். கடந்த நூற்றாண்டின் இறுதி வரை மக்கள்தொகைதான் பெரும் சிக்கலாக இருந்தது. அப்போதும் கூட Anti Natalism என்கிற வரையறுக்கப்பட்ட வாதம் வரவில்லை.

’இல்லாமலே இருந்திருக்கலாம்’ என்ற அர்த்தம் தொனிக்கும் Better Never to Have Been என்ற தலைப்பில் 2006ம் ஆண்டில் டேவிட் பெனட்டர் என்பவர் ஒரு புத்தகம் எழுதினார். அவரைப் பொறுத்தவரை ‘வாழ்க்கை என்பது துயரங்கள் நிரம்பியது. இன்னொரு உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வருவது நிச்சயமாக அந்த உயிருக்கும் துன்பத்தை விளைவிக்கும்.’ மேலும் “நம் இருப்பை தடுப்பதற்கான வாய்ப்பு நமக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால் எதிர்கால மக்கள் வராமல் தடுப்பதற்கான வாய்ப்பு நம்மிடம் இருக்கிறது,” என்பதே அவரின் வாதம்.

மறுபக்கத்தில் மதம், குடும்பம் போன்ற வழிகளில் குழந்தைப் பிறப்பு கட்டாயப்படுத்தப்படும் சூழலும் இருக்கிறது. புதிதாக ஒருவரை சந்தித்தால் கூட வெட்கமே இன்றி ‘எத்தனை குழந்தைங்க?’ எனக் கேட்கும் அதிகாரத்தை சமூகம் அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. அதுபோக காதலுறவில் இருக்கும் இருவர் தங்களின் மரபணுவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவென விருப்பம் கொண்டிருப்பதும் இயல்பு!

பெனட்டர் தன் புத்தகத்தில் இப்படி எழுதுகிறார்: “நமக்கு எப்போதும் பசியாகவோ தாகமாகவோ இருக்கிறது. கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. வெப்பநிலையில் பிரச்சனை நமக்கு ஏற்படுகிறது. சோர்வாக இருக்கிறோம். அல்லது தூங்க முடியாமல் தவிக்கிறோம். அரிக்கிறது. ஒவ்வாமை ஏற்படுகிறது. குளிரெடுக்கிறது. மாதவிடாய் வலி கொடுக்கிறது. அடிப்படையில் வாழ்க்கை என்பது விரக்திகளாலும் எரிச்சல்களாலும் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல், வரிசை, படிவங்கள் என எங்குமே எரிச்சல்தான். வேலை பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறோம். நம் வேலைகள் பெரும் சோர்வை அளிக்கின்றன. வேலையை விரும்பிச் செய்பவர்களிடம் கூட நிறைவு இருப்பதில்லை. பலர் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். திருமணம் செய்தவர்கள் சண்டை போட்டு விவாகரத்து செய்கின்றனர். இளமையாக இருக்க விரும்புகிறோம் ஆனால் முதுமை எய்கிறோம்...”.

கிட்டத்தட்ட ஊர் பெருசுகள் புலம்புவதைப் போல் புலம்பல்களை தொடுத்து ஒரு பெரும் கருத்துப் போக்கை உருவாக்கியிருக்கிறார்!

இவை உண்மையா?

ஆம். உண்மைதான். ஆனால் முழு உண்மை இல்லை.

பசியும் தாகமும் தணிக்க முடியாத வேலைப்பளுவில் இருக்கிறோம். வெப்பநிலைக்குக் காரணம் கார்பன் வெளியீடு. தூக்கமின்மைக்குக் காரணம் பதட்டம். அரிப்பு, ஒவ்வாமை, குளிருக்குக் காரணம் தடுப்பு மருத்துவமோ இலவச மருத்துவமோ இல்லாதது. மாதவிடாய் வலிக்கு ஓய்வு தேவை. நிறுவனங்கள் விடுப்பு கொடுப்பதில்லை. போக்குவரத்து நெரிசலுக்கு நகரமயமாக்கல் காரணம். வரிசைக்கும் படிவங்களுக்கும் அரச நடைமுறைகள் காரணம். வேலைகள் சோர்வை கொடுக்க நீண்ட வேலை நேரங்கள் காரணம். திருமணம் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் தனிமனிதவாதம், வருமானமின்மை, பதட்டம். விவாகரத்து ஒன்றும் தவறில்லை. முதுமை உடலில் வருவதற்கு முன்பே சிந்தனையில் வந்துவிடுகிறது. இவை எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பு இருக்கிறது. ஓர் அரசியல் இருக்கிறது. அதற்குப் பெயர் முதலாளித்துவம்.

எனவே அடிப்படையில் இனவிருத்தி மறுப்பு அல்லது Anti Natalism என்கிற கருத்தாக்காத்தை முதலாளித்துவ நுகர்வு வாழ்க்கையில் உழல விரும்பி தோற்கும் மத்திய தர வர்க்கத்தின் முதலாளித்துவ சிந்தனை உருவாக்கும் கருத்தாக்கம் என வரையறுக்கலாம்.

எனில் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாமா?

க்ரெட்டா துன்பெர்க் என்கிற சிறுமி, ‘எங்களின் எதிர்காலத்தை நீங்கள் அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்தும் உலக நாடுகளுக்கு எதிர்த்து போராட்டம் அறிவிக்கும் நிலையில்தான் உலகின் உயிர் வாழ் சூழல் இருக்கிறது. பிறந்துவிட்ட குழந்தைகளுக்கே வாழ்வதற்கான சூழல் அழிந்து விடுவோமோ என்கிற அச்சம் ஏற்படுகையில், புதிய உயிர்களை பிறப்பிக்க உள்ளபடியே காலநிலை ஆர்வலர்கள் பலர் தயக்கம் கொண்டுள்ளனர்.

குழந்தைப் பிறப்பை தவிர்ப்பது பாலூட்டி இனமான மனிதப் பரிணாமத்துக்கே எதிரானது. குழந்தைப் பிறப்பை மறுதலிக்கும் இடத்துக்கு மனித இனத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது முதலாளித்துவம். முதலாளித்துவம் அழிக்கப்படாமல் சமத்துவம் நேராது. சமத்துவம் இன்றி பரிணாமம் தழைக்காது.

குழந்தைப் பெற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால் அந்த விருப்பத்துக்குப் பின் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டோ பெற்றுக் கொள்ளாமலோ அந்த அரசியலை எதிர்த்து போராட வேண்டும்!

Also Read: “நிதி பிரச்சனை உள்ளது.. மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு ஒன்றிய அரசே காரணம்” : அமைச்சர் மா.சு விளக்கம்!