உணர்வோசை

அண்ணன்-தங்கை உறவு நிலவுடைமை மனநிலையா? சகோதர உறவு தோழமையாகவேண்டியதன் அவசியம் என்ன ?

அண்ணன் - தங்கை உறவுகள் சுவாரஸ்யமானவை. தமிழ்ச்சமூகத்தில் அதிக காவியத்தன்மை கொடுக்கப்பட்ட உறவும் கூட. அந்தக் காலத்து ‘பாசமலர்’ தொடங்கி, ‘கிழக்குச் சீமையிலே’ என பல திரைப்படங்களில் அண்ணன் - தங்கை கதைகள் காவியங்களாக காண்பிக்கப்படுகின்றன.

இளம்பிராய அண்ணன் - தங்கை உறவுகள் கிட்டத்தட்ட ‘டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூன் ரகத்தில் இருக்கும். அடிதடி நடக்கும். அப்பா, அம்மாவுடன் போட்டுக் கொடுத்து அடி வாங்கிக் கொடுப்பது அரங்கேறும். அதே சமயத்தில் உள்ளூர ஒரு வகை அன்பும் இருக்கும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி அண்ணன் - தங்கை உறவு கொண்டிருக்கும் சமூக யதார்த்தம் என்ன?

அடிப்படையில் அண்ணன்-தங்கை உறவு, நிலவுடைமை மனநிலையை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் உறவு. அண்ணன், தங்கை பாசம் எல்லாம் அதற்கான சிமெண்ட் கலவைதான். அந்த உறவு கொள்ளும் அன்பின் வழி ஆணாதிக்கம், ஆண் அதிகாரம் எல்லாம் பூடகமாக நிறுவப்படும். குடும்பச் சொத்து அண்ணனுக்குத்தான் என பேசும் தங்கைகள் இருக்கின்றனர். பெரும்பாலும் அண்ணன், தங்கை உறவு என்பது சொத்து மற்றும் செய்முறையை சுற்றியே வரும். அதில் தங்கைக்கான உரிமையை மறுக்க அன்பை பயன்படுத்துவான் அண்ணன். அப்பாவும், அம்மாவும் அதை வழிமொழிவார்கள். சில இடங்களில் நேரடி வன்மத்துடனே தங்கைகளுக்கு எதிராக இறங்குவான் அண்ணன்.

சில இடங்களிலெல்லாம் அப்பா, அம்மா என அவ்வளவு அன்புடன் ஏங்கும் பெண் இருப்பார். அம்மாவும் அப்பாவும் தம்பியும் கூட அவளுக்காக அன்பை வடிப்பார்கள். ஆனால் நிலம் என்று வந்தால் அது தம்பிக்குதான் செல்லும். தாய் தனியாக இருக்கும்போதும், தந்தை தனியாக இருந்தபோதும், தம்பி துவண்டு இருந்திருந்தபோதும் ஆறுதலாய் இருந்து பொருளுதவி, பண உதவி என எல்லாம் செய்த பெண்ணுக்கு நிலத்தில் பங்கு மறுக்கப்படும்.

இந்த நிலவுடைமை மனோபாவத்தையும் அன்பு என்ற அற்புத உணர்வை சங்கிலியாக பயன்படுத்தும் கயமைத்தனத்தையும் உடைக்கவே அண்ணன்கள் தங்கைகளுக்கு தோழர்களாக வேண்டும்.

தங்கைகள் எவரிடமும் சொல்லத் தயங்கும் விஷயத்தை அண்ணன் தோழனாக இருந்தால், அவனிடம் சொல்வார்கள். ஆறுதல் தேடுவார்கள். பிற வேலைகள் காரணமாக அவர்களிடம் கொஞ்ச நாட்கள் பேசாமலும் அவர்களை பொருட்படுத்தாமலும் இருந்துவிட்டால் போதும். அடிதடி நடக்கும். திட்டுவார்கள். மிதிப்பார்கள். உரிமையோடு உதைப்பார்கள்.

பண உறவாக, ஆதாய உறவாக இல்லாமல் ஆகும்போதுதான் அண்ணன் - தங்கை உறவு உண்மையான புனிதத்தை எட்டுகிறது.

மிக நெருக்கத்தில் அம்மாவுக்கு அடுத்தபடியாக ஒரு ஆண் பார்க்கும் பெண், அக்காவும் தங்கையும்தான். அந்த உறவில் இருந்து ஆதாயத்தை அகற்றினால் மட்டுமே அவனால் ஒரு பெண்ணின் மனநிலையை புரிந்துகொள்ள முடியும். அக்காவையும் தங்கையையுமே ஆதாய உறவாக பார்த்து வருபவன், மனைவியையும் காதலியையும் சமூகத்தின் பிற பெண்களையுமே அப்படித்தான் பார்ப்பான். அதே போல் ஆணை ஒரு பெண் புரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தால், ஆதாயத்தை தூக்கிவிடுகையில், உங்கள் தங்கை உங்களை புரிந்துகொள்ள முடியும். அங்கிருந்து பிற ஆண்களின் அகச்சிக்கல்களை அவளால் புரிந்துகொள்ள முடியும். களையவும் முடியும்.

அண்ணன் தங்கை உறவின் அற்புதத்தை புரிந்துகொள்ளவே நாம் இந்தியச்சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. பெரியாரை படிக்க வேண்டி இருக்கிறது.

Also Read: சொத்தையான பற்கள்.. அதிக அளவில் குளிர்பானங்களை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..மருத்துவர்கள் எச்சரிக்கை!