உணர்வோசை

அறிவு என்பது என்ன ? இந்துத்துவக்காரன் கூட இயங்குகிறான்.. அதை அறிவு என்று சொல்ல முடியுமா ?

சுயமரியாதை என்பதை எத்தனை பேர் - பெண்களும், ஆண்களுமே - அதன் குறுக்குவெட்டில் முழுமையாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள்?

சுயமரியாதை என்பது அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து கொள்வது எனில் எது அடிமைத்தனம்?

உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்துக்கு நீங்கள் அடிபணியாததை சுயமரியாதை என்கலாமா? அல்லது உங்கள் அறிவுக்கு ஒப்பாத ஒரு விஷயத்துக்கு அடிபணியாததை சுயமரியாதை எனலாமா?

உங்கள் சுயத்துக்கு என ஒரு மரியாதை இருக்கிறது எனில் உங்கள் சுயம் என்பது என்ன? உங்கள் சுயத்தை எப்படி define செய்வீர்கள்?

சுயம் என்பது evolve ஆகிக் கொண்டே இருப்பது. எப்படி evolve ஆகும்? புது விஷயங்களை தெரிந்து கொள்வதால், கற்பதால் நிகழும். அதாவது அறிவால் நிகழும்.

அறிவை எப்படி வகுப்பது? இந்துத்துவக்காரனும் ஒரு வகை அறிவை கொண்டுதான் இயங்குகிறான். அவனை சுயமரியாதை கொண்டவன் என சொல்லிட முடியுமா?

ஆக அறிவில் எது நல்லறிவு? நல்லறிவை கண்டறிய ஓர் அறிவு இருக்கிறது. பெரியார் சொன்ன அறிவு. பகுத்தறிவு! நீங்களே பகுத்து ஆராய்ந்து பரீட்சித்து நல்லறிவை அடைய வேண்டும். அதன் துணை கொண்டு நீங்கள் பேசும் சுயமரியாதை மட்டுமே சுயமரியாதை.

எனில் சுயமரியாதையை எப்படி வகைப்படுத்துவது?

நல்லறிவை இன்னும் கொஞ்சம் எளிமையாக பார்ப்போமே. நல்லறிவு என்பது நீங்கள் சார்ந்திருக்கும் மக்கள் i.e. அப்பா, அம்மா, குடும்பம், நீங்கள் சார்ந்திருக்கும் சாதி, மதம், ஊர் போன்ற பின்னணி எதன் நலனும் இல்லாமல், தாக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே தேடி ஆராய்ந்தறிந்த அனுபவங்களின் வழியாக கொள்ளும் மரியாதைதான் சுயமரியாதை.

இந்த சுயமரியாதையில் உங்கள் தனிப்பட்ட நலன் என்பது இருக்காது. அது ஒரு மேன்மை நிலைக்கான சுயமரியாதையாக இருக்கும்.

இங்கு உங்கள் முடிவில் உங்கள் குடும்பம் தலையிட முடியாது. உங்கள் அம்மா என்ன சொல்வாரோ என்ற பயம் உங்களுக்கு இருக்காது. ஏனெனில் உங்கள் முடிவில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். அது கொடுக்கும் தைரியம் இருக்கும்.

அடுத்து, நீங்கள் எடுத்த முடிவு - கல்யாணம், காதல் - எதுவாகினும் தவறாக இருந்தால், அதை திருத்திக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்ல உங்கள் நல்லறிவு வழி கொடுக்கும். சுயமரியாதை ஆதரவாக நிற்கும். இந்த இடத்தில், உங்கள் சுயமரியாதை, உங்கள் முடிவுக்கு ஒத்துவராத நபரின் மேல் வன்மம் கொள்ளாது. அவரேதான் வேண்டுமென நிர்ப்பந்திக்காது. அவரின் விருப்பத்துக்கும் மதிப்பளித்து உங்கள் விருப்பத்தை தகவமைத்து கடந்து செல்லும்.

சுயமரியாதை என்பது இப்போது புரிந்துகொள்ளப் பட்டிருப்பது போல் நிராகரித்தல் அல்ல. எதையும் புரிந்துகொள்ளாமல் பிடிவாதம் பிடிப்பதல்ல. தனக்கு எல்லாம் தெரியும் என கொள்ளும் அகங்காரமும் அல்ல. என் சுயத்தின் மீதான எனது மரியாதை! நான் மரியாதை கொண்டிருக்கும் சுயம், மேலும் மேலும் ஆரோக்கியமாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருப்பதற்கான விஷயங்களை மட்டும்தான் செய்வேனே அன்றி, எனக்கு பிடிக்கிற விஷயங்களை செய்ய மாட்டேன்.

நமக்கு பிடிக்கும் விஷயங்களுக்கும் நம் அறிவுக்கு ஒப்பும் விஷயங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் சுயமரியாதை அன்று. பகுத்தறிவும் நல்லறிவும் இல்லாத சுயமரியாதை, அகங்காரம் மட்டுமே!

சுயமரியாதை என்பது சமூக இயக்கம். அதை அதிகாரத்துக்கு கொண்டு சேர்க்காமல், இங்கு ஆணும் பெண்ணும் தன்னின் உண்மையான சுயத்தை அறியவும் முடியாது. சுயமரியாதை பழகவும் முடியாது.

Also Read: தூங்கிக்கொண்டிருந்த மனைவி.. தூக்கிச்சென்று ரயிலின் முன் வீசிய கொடூர கணவர்..வெளிவந்த பதைபதைக்கும் வீடியோ!