உணர்வோசை

குற்றவாளி கூண்டில் மனிதர்கள்; விசாரணை நடத்தும் இயற்கை; முடிவு என்ன? எச்சரிக்கை ரிப்போர்ட்

உத்தரப்பிரதேசத்துக்கு ஆன்மீக பயணம் சென்றிருந்த நான்கு முதியவர்கள் ரயிலில் இறந்திருக்கிறார்கள். வெப்ப அலைகள் காரணம். அவர்களோடு பயணித்த மற்றவர்கள், 'வெப்பம் தாங்க முடியாமல் நால்வரும் அவதிப்பட்டதாக' கூறியிருக்கின்றனர்.

மொட்டை வெயிலில் தன்னந்தனியே நீண்ட தூரம் பயணித்து சோர்ந்து போய் நாவறண்டு வீழ்ந்து இறப்பதை போல் கிடையாது. நால்வரும் ரயிலில்தான் இருந்திருக்கிறார்கள். சில மணி நேர பயணம்தான். ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார்கள்.

சமீப வருடங்களாக வெப்ப அலைகள் வீசும் அளவுக்கான வெயில் வடக்கில் வழக்கமாக இருந்து வருகிறது. அது El Nino அல்லது La Nina effect-களின் விளைவு என சொல்லி சென்றிட முடியாது. அந்த effectகளுக்கு இடையே ஏற்படும் இடைவெளி வருடங்கள் ஏதும் இல்லாமல் தொடர்ச்சியாக வெயில் வாட்டிக் கொண்டிருக்கிறது.

நேற்றும், அநேகமாக இன்றும் சென்னையில் வசிப்பவர்கள் வெயிலின் கொடூரத்தை உணர்ந்திருப்பீர்கள். அனலுக்கு நடுவே நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தென் மேற்கு பருவ மழை ஓரளவுக்கு தெற்கே சூட்டை தணிக்கலாம். ஆனால் வேறு வகையான பிரச்சினைகள் அங்கு தோன்றும்.

சென்னை நகரத்தில் தண்ணீர் இல்லை. பஞ்சம் அதன் கோர முகத்தை காட்டத் துவங்கி விட்டது. ரயில்களில் சென்னைக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. அது நிச்சயமாக உங்களுக்கும் எனக்கும் இருக்காது. அந்த தண்ணீரும் எந்த கிராமத்தில் எவர் அனுமதியுடன் உறிஞ்சப்பட்டது எனவும் தெரியாது. அரபிக்கடலில் உருவாகி இருக்கும் புயல் பெரும் அழிவை மேற்கு முனையில் ஏற்படுத்தலாமென அவதானிக்கப்படுகிறது.

இவை எதுவும் நன்மைக்கல்ல. நம் கண் முன்னமே நமக்கு வேண்டிய முதியவர்கள் சுருண்டு விழுந்து இறக்க இருக்கிறார்கள். தண்ணீருக்கு கொலைகள் விழலாம். பஞ்சத்தின் முழு ஆகிருதி வெளிப்படவிருக்கிறது. போராட்டங்கள் வெடிக்கும். வழக்கம்போல் உயிர்களை குடிக்கும்.

அசாதாரணத்தை கூட சாதாரணம் என நினைக்கும் அளவுக்கு நம் கூர் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. இவை எதுவும் சாதாரணம் அல்ல.

இவை எல்லாம், இயற்கை நம்மை கூண்டில் ஏற்றி விசாரித்து கொண்டிருப்பதன் வடிவங்கள். விசாரணையின் முடிவை எட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளங்கள். முடிவு?

மரண தண்டனை!

நீதிபதியின் பெயர், பருவநிலை மாற்றம்!