murasoli thalayangam

ஸ்ரீவைகுண்டம் பெண்ணும் சிங்கப் பெண் படையும்...! : துர்நாற்ற ஆட்சி நடத்தி வரும் விஜய் - முரசொலி!

முரசொலி தலையங்கம் (10-06-2026)

ஸ்ரீவைகுண்டம் பெண்ணும் சிங்கப் பெண் படையும்.

விஜய் ஆட்சியில் விஜய் கட்சிக்காரர்களால் எத்தகைய குற்றச் செயல்கள் நடக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் ஸ்ரீவைகுண்டம் சம்பவம்.

“விஜய்யின் தீவிர ரசிகையான என்னை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம். எல். ஏ. வின் பெயரைச் சொல்லி அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தார்கள்” என்று கதறுகிறார் அந்தப் பெண்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், த.வெ.க. கட்சியில் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞர்அணி நிர்வாகியாக இருக்கிறார். அவரது நண்பர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயபால். இவரும் த.வெ.க. நிர்வாகிதான். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் இந்தச் செயலைச் செய்துள்ளார்கள். பிரச்சினை பெரிது ஆனதும் வேறு வழியில்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

“நான் 1997 ஆம் ஆண்டுமுதல் விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகர் மன்றத்திலும்தொடர்ந்து செயல்பட்டு வந்தேன். இப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஆகி இருக்கும் அன்னை விஜி சரவணனுடன் இணைந்து கடந்த இரண்டு வருடமாக கட்சிப் பணியாற்றி வந்தேன். அப்போது பாலசுப்பிரமணியம் அறிமுகம் ஆனார். அவர் எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். அதற்காக ராமநாதபுரம் அழைத்துச் சென்றார். சரவணன் பெயரைச் சொன்ன தால்தான் நானும் சென்றேன். காரில் செல்லும் போது கலர் பாட்டிலில் ஏதோகலந்து கொடுத்தார்கள். அதனால் மயக்கம் அடைந்தேன். அவரும் இன்னொரு வரும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். ‘சரவணன் தான் கூட்டி வரச் சொன்னார்' என்று அவர்கள் சொன்னார்கள். இதை வெளியில் சொன்னால், ‘உனது குழந்தையை கொலை செய்துவிடுவோம்' என்றார்கள். மே மாதம் 3 தேதி இது நடந்தது.

இது பற்றி சரவணனிடம் கேட்டேன். ‘புஸ்ஸி ஆனந்திடம் சொல்லி உனக்கு வேலை வாங்கித் தருகிறோம், இதை பெரிது படுத்தாதே' என்று எம். எல்.ஏ. சரவணன் சொன்னார். என்னோடு சேர்ந்து இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று என் காலில் விழுந்து அழுதுள்ளார். இது பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம்சொன்னேன். அமைச்சர் ஜெகதீஸ்வரியிடமும் சொன்னேன். யாரும் சரவணன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார் அந்தப் பெண்.

"எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவலைச் சொல்கிறார் அந்தப் பெண்” என்கிறார் எம்.எல்.ஏ. சரவணன். இவ்வளவுதான் அவரது பதிலே!

1997 ஆம் ஆண்டு முதல் விஜய் ரசிகையாக இருந்தவருக்கு நடந்திருக்கும் அவலம் இது. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதில் செயல்பட்டவருக்கு நடந்த கொடுமை இது. ஸ்ரீவைகுண்டம் எம். எல்.ஏ.வான அன்னை விஜி சரவணனிடம் பணியாற்றி உள்ளார். கேரளாவில் லாட்டரி தொழில் பார்த்து வந்த அவருக்கு கணக்கு வழக்குகள் பார்த்து வந்துள்ளார் இந்தப் பெண். இத்தகைய பெண்ணுக்கு விஜய் கொடுத்த நீதி என்ன? த.வெ.க. கட்சியில் இருந்து அவரை நீக்கியதுதான் நீதி. இதைவிடக் கேவலமான, படுமோசமான முதலமைச்சர் இருக்க முடியுமா?

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனை, எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலக வைத்திருக்க வேண்டாமா? அவரை கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டாமா? அவரைக் கைது செய்திருக்க வேண்டாமா? இது எதையும் செய்யவில்லை முதலமைச்சர் விஜய். இதுதான் அவர் ஆட்சி நடத்தும் லட்சணமா?

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?"விஜய் நடித்த 'தெறி' படத்தில் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் தண்டனை போல் இவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். விஜய் ரசிகையாக இருந்த பாவத்துக்கு எனக்கு இது தேவையா? எனக்கு நீதி வேண்டும். முதலமைச்சர் விஜய் என்னை அழைத்து என்ன நடந்தது என்று கேட்கவேண்டும். இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளார்கள். ஒருவரும் என்னிடம் என்ன நடந்தது என்று இதுவரை கேட்கவில்லை” என்று சொல்லி இருக்கிறார்.

படத்தில் விஜய் செய்வதை எல்லாம் நிஜத்தில் செய்வார் என்று மக்கள் நினைத்து வாக்களித்ததால்தான் தமிழ்நாடு இன்று தலைகுனிந்துள்ளது. ‘நீங்க ஆக்ஷ்ன் ஹீரோ போல ஆக்க்ஷன் எடுப்பீங்கன்னு நினைச்சுதான் வோட்டு போட்- டோம்' என்று கோவையில் ஒரு பெண் கதறியதையும், ‘தெறி' படம் போல தண்டனை கொடுக்க வேண்டும்என்று ஸ்ரீவைகுண்டம் பெண் சொல்வதையும் பார்த்து 'சினிமா மாயை' எந்தளவுக்கு சமூகத்தை பாழ்படுத்தி இருக்கிறது என்பதை நினைத்து வேதனையாக இருக்கிறது. சினிமாவில் ஹீரோவாக நடித்த விஜய், முதலமைச்சர் ஆனதும் வில்லனாக இருக்கிறார் என்பதற்கு ஸ்ரீவைகுண்டம் சம்பவம் ஒரு உதாரணம்.

பாலியல் வன்கொடுமை செய்த பாலசுப்பிரமணியம், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் உடன் இருக்கும் படம் வெளியாகி இருக்கிறது. கட்சித் துண்டுடன் இருக்கிறார் சரவணன். எனவே இது சமீபத்தில் எடுத்த படம்தான். பேட்டி கொடுத்த சரவணன், கைதானவர்களை எனக்குத் தெரியாது என்று சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அமைச்சர் ஆனந்த் பெயரை சரவணன் சொல்லி இருக்கிறார். எனவே அனைவர் மத்தியிலும் கடந்த ஒரு மாதமாக இப்பி- ரச்சினை பேசப்பட்டு வந்துள்ளது. கட்சியை விட்டு இருவர் நீக்கப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணும் நீக்கப்பட்டுள்ளார் என்றால் விஜய்க்கு இந்த பிரச்சினை முழுமையாகத் தெரியும். தெரிந்தே அநீதி செய்துள்ளார் விஜய்.

இதை வைத்துப் பார்க்கும் போது, 'சிங்கப் பெண் படை' என்பதேகண்துடைப்பு படையாகத் தான்இருக்கப் போகிறது. குற்றம் நடக்காமல் தடுக்க இதை விஜய் உருவாக்கப் போகிறார். ஸ்ரீவைகுண்டத்தில் உண்மையான குற்றவாளி யார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணே சொல்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் விஜய் எடுக்கவில்லை. துர்நாற்ற ஆட்சி நடத்தி வருகிறார் விஜய்.

Also Read: விஜய்க்கு மக்களைப் பற்றிய மரியாதை எப்படி இருக்கும்? இரண்டு கட்சிகள் இருவேறு காட்சிகள் : முரசொலி