murasoli thalayangam

வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!

முரசொலி தலையங்கம் (19-05-2026)

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு!

ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்ததும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இப்போது உயர்ந்துவிட்டது. லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை என்பதை தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். எனவே ஒரு தொடர் சங்கிலியின் தொடக்கத்தை உயர்த்தி அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள்.

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி பெரும்பான்மை மக்களின் நிம்மதிக்கு மே மாதம் முதல் நாளில் உலை வைத்தது பா.ஜ.க. ஐந்து மாநிலத் தேர்தல் முடியும் வரை காத்திருந்து, கடைசி வாக்குப்பதிவு முடிந்ததும் உயர்த்தினார்கள்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் ஒன்றாம் தேதியன்று பொதுத்துறை நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது. இதனடிப்படையில் கடந்த மே 1 ஆம் தேதியன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவ- னங்கள் உயர்த்தி விட்டன. 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டர் விலையில் 993 ரூபாய் ஒரே நேரத்தில் உயர்த்திவிட்டார்கள். அதாவது ஏறத்தாழ ஆயிரம் ரூபாயை ஒரே நேரத்தில் உயர்த்தி விட்டார்கள். இதன் மூலமாக உணவகங்க- ளில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்துவிட்டது.

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ3.14 உயர்கிறது. இனி லிட்டர் விலை ரூபாய் 103.98 ஆகும். டீசல் விலை ரூ 3.11 உயர்கி- றது. இனி ஒரு லிட்டர் டீசல் விலை 95.50 ரூபாய் ஆகும். இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை கிலோ ரூபாய் 91.50 ரூபாய் ஆகும்.

2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் விலை உயர்த்தப்படுகிறது என்று காரணம் சொன்னாலும், இது அப்பாவி மக்களைப் பாதிக்கும் விலை உயர்வு ஆகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னாக பெட்ரோல், டீசல் விலையை தலா 2 ரூபாய் குறைத்தார்கள். இது நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம் ஆகும். இப்போது 3 ரூபாய் அதிகரித்துள்ளார்கள். இது தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஆகும்.

இந்த விலை உயர்வுக்கு மேற்காசியப் போரை ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். போர் இல்லாத காலத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களா? குறைவாக இருந்ததா?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை ஒரு காரணமாகச் சொல்வார்கள். கச்சா எண்ணெய் விலை குறைந்த காலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா என்றால் இல்லை. இல்லவே இல்லை. எப்போதும் மாதத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்ற பல்லவியைத் தான் தொடர்ந்து பாடி வருகிறார்கள். எவ்வளவு விலையை உயர்த்தினாலும் இந்த எண்ணிக்கையை அவர்கள் குறைப்பது இல்லை.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு காரணம் சொல்வார்கள். இப்போது சொல்வது மேற்காசியப் போர் ஆகும். எல்லாக் காலத்திலும் உலகில் ஏதோ ஒரு மூலையில் போர் நடந்து கொண்டுதான் இருக்கும். அதையே காரணமாகச் சொல்வதா

ஏழை எளிய மக்களைப் பாதிப்பது மட்டுமல்ல; சிறுகுறு நடுத்தர நிறுவனங்களையும் இது பாதிக்கும். நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டது இல்லை. இதுபோன்ற விலை உயர்வு சாதாரண மக்களை எந்த வகையில் பாதிக்கும் என்பதை பா.ஜ.க. உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டாமா? இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று மக்களுக்கு அறிவுரை சொல்லும் அரசு, இதுபோன்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்த எதையாவது செய்தார்களா என்றால் இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து வீட்டுப் பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்த எண்ணெய் நிறு வனங்கள் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 7 ஆம் தேதி தான் வீட்- டுப் பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. இப்போதும் மேலும் கூட்டப் போகிறார்கள். 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இது ஏழை எளிய, நடுத்தர மக்களின் தலையில் பெரும் சுமையை உருவாக்கப் போகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கப் போகிறது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரப் போகிறது. காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை எகிறப் போகிறது. இதனால் சாதாரண, சாமானிய மக்கள் செலவழிக்கும் தொகை அதிகம் ஆகப் போகிறது. பயணக் கட்டணங்கள் அதிகரிக்கும். தனியார் பேருந்துகள் தங்களது கட்டணத்தை அதிகரிப்பார்கள். இப்படி ஒவ்வொன்றாக உயரவே செய்யும்.

சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசும் போது, வீட்டில் இருந்தே வேலை பாருங்கள், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். மின் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளைப் போட்டார். ஊரடங்கை நோக்கி ஒன்றிய அரசு செல்கிறதோ என்ற அச்சத்தை இது உருவாக்கி உள்ளது.

வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Also Read: ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !