murasoli thalayangam
இதை சொல்ல ஜெய்சங்கருக்கு அவமானமாக இல்லையா? : முரசொலி ஆவேசம்!
அமெரிக்காவில் இருந்து கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் மனித உரிமை மீறல் ஆகும். ‘இது புதிதல்ல’ என்று ஒன்றிய பாஜக அமைச்சர் ஜெய்சங்கர் சொல்வது அவர் எந்த நூற்றாண்டு மனிதர் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தக் கூடிய இந்த விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள பதில் பொறுப்பற்ற தன்மையாக -– இயந்திரத்தனமாக இருக்கிறது. ‘’அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது அல்ல’’ என்று சொல்வதற்கு அவமானமாக இல்லையா?
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் வந்ததில் இருந்து, சட்டவிரோதக் குடியேற்றங்கள் குறித்து அதிகமாகப் பேசி வருகிறார். அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாகச் சொல்லி கைது செய்து ராணுவ விமானத்தில் அனுப்பி வைத்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதியன்று கிளம்பிய ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்து சேர்ந்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த 33 பேர், அரியானாவைச் சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பைச் சேர்ந்த 30 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பேர், சண்டிகரைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்க அரசியலுக்குள் நாம் செல்ல விரும்பவில்லை. ஆனால் இவர்கள் கைகளில் விலங்கிட்டும், கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த வீடியோ காட்சிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க எல்லைக் காவல் படையின் தலைவர் மைக்கேல், ‘’சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பி விட்டோம். ராணுவ விமானத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நாடுகடத்தல் இதுவாகும்” என்று சொல்லி இருக்கிறார்.
‘’அமெரிக்க அதிகாரிகள் எங்கள் கைகளில் விலங்கு பூட்டியும், கால்களை சங்கிலியால் பிணைத்தும் விமானத்தில் ஏற்றினார்கள். விமானத்தில் நாங்கள் எங்களது இருக்கையில் இருந்து நகரக் கூட அனுமதிக்கவில்லை. கழிப்பறை செல்வதற்குக் கூட கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. அப்படி கழிப்பறை செல்லும் போது கூட கைவிலங்கும், கால் சங்கிலியும் அகற்றப்படவில்லை. கழிப்பறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விமானத்தில் நாங்கள் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை. விமானம் அமிர்தசரசில் தரையிறங்கிய பிறகு கைவிலங்கு மற்றும் கால் சங்கிலி அகற்றப்பட்டது. அதன்பிறகு தான் எனக்கு உணவு வழங்கப்பட்டது” என்று பஞ்சாப்பை சேர்ந்த சுக்பால் சிங் சொல்லி இருக்கிறார்.
குஜராத்தைச் சேர்ந்த 29 வயது பெண் குஷ்பு படேல், அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர் ஆவார். அவரது சகோதரர் அருண் அளித்த பேட்டியில், ‘’ எனது சகோதரி சுற்றுலா விசாவில் சென்றார். இப்போது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து அமிர்தசரஸ் வரும் வரை அவர் கையில் விலங்கு போட்டு வைத்திருந்துள்ளார்கள். அவர் இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறார்” என்று சொல்லி இருக்கிறார். இதை வாசிக்கும் போதே உடல் நடுங்குகிறது. அந்தக் காட்சிகள் அச்சம் தருகிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தன. உடனடியாக இது குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. ‘மனிதர்கள் கைதிகள் அல்ல’ என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.
மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி கேள்விகள் எழுப்பிய நிலையில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்ன பதில் அளித்துள்ளார் தெரியுமா? ‘’சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுவது புதிது அல்ல. மீண்டும் சொல்கிறேன்.. இது புதிது அல்ல. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆயிரத்து 756 பேர் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இந்தப் பணிகளை அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அமெரிக்க விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை கடந்த 2012 முதல் அமலில் உள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் கிடையாது. இந்தப் பயணங்களின் போது மருத்துவத் தேவைகள் கவனிக்கப்படுகிறது. கழிவறை செல்ல அனுமதிக்கப்படுகிறது. இது அனைத்து விமானங்களுக்கும் பொருந்தும். இந்த நடைமுறை தான் கடந்த 5ஆம் தேதியன்று அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கும் கடைப்பிடிக்கப்பட்டன” என்று சொல்லி இருக்கிறார்.
‘’ராணுவ விமானத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நாடு கடத்தல் இதுவாகும்” என்று அமெரிக்க அதிகாரி சொல்கிறார். ஆனால் இது புதிதல்ல என்கிறார் இந்திய அமைச்சர்.
மனிதாபிமானம் இல்லாமல், மனித உரிமை மீறலாக ஏன் அழைத்து வரப்பட்டார்கள் என்று கேட்டால், இது புதிதல்ல, இப்படித்தான் அமெரிக்க சட்டம் சொல்கிறது என்கிறார் இந்திய ஒன்றிய அமைச்சர்.
இப்படி அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று தெரிந்ததும், இந்திய அரசு அமெரிக்க அரசிடம் பேசியதா? இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் நண்பர்கள் என்பது நாடு அறிந்தது. இதைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் பேசினாரா? பேசியிருக்க வேண்டாமா?
‘’இந்தியர்களை கண்ணியமாக அழைத்து வர இந்திய விமானம் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சொல்வதில் நியாயம் உண்டு.
இது வெறும் மனித உரிமை மீறல் மட்டுமல்ல, இந்தியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலமாக இந்தியா அவமதிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!