murasoli thalayangam

முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது 2வது முறை தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின்: முரசொலி வாழ்த்து

முரசொலி தலையங்கம் (10-10-2022)

தலைவர் வாழ்க!

தலைமுறை வாழ்க!

பேரறிஞர் அண்ணாவாய்- –

முத்தமிழறிஞர் கலைஞராய் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காக்க இரண்டாம் முறையாய் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை- கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி’ மனதார - நெஞ்சார – உள்ளமெல்லாம் பொங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது!

‘முரசொலி’க்குத்தான் அந்த வாழ்த்துகளையும் பாராட்டு களையும் சொல்வதற்கு முழுத் தகுதியும் – - முதல் தகுதியும் இருக்கிறது. காலையில் தினமும் கண்விழித்தால் கலைஞரின் பிள்ளையாக கழகத்தவர் அனைவர் கரங்களிலும் தவழும் பிள்ளைதான் ‘முரசொலி’. எண்பதாண்டுகளைக் கடந்தும் கழகத்தவர்க்கு மட்டுமல்ல; - தமிழ்நாட்டு உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் மூச்சொலியாக இருப்பது ‘முரசொலி’. அத்தகைய ‘முரசொலி’ கழகத் தலைவரை பல்லாண்டு வாழ்க, தலைமுறைகள் செழிக்க வாழ்க என வாழ்த்துகிறது!

காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது வாழ்க்கை என்பது ஒரு தனிமனிதனின் வாழ்க்கை அல்ல. அது இயக்கத்தவர்க்காகவே இளம் வயதில் ஒப்படைக்கப்பட்ட வாழ்க்கை. ‘கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்ற நிலைமை வருமானால் அப்போது நான் மு.க.ஸ்டாலின் அவர்களைத்தான் முன்மொழிவேன்’ என்று கழகப் பொதுக்குழுவிலேயே தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள். அது முதல் கழகத்தின் எதிர்காலம் தளபதியார் அவர்களே என கணிக்கப்பட்டார். கலைஞர் அவர்கள் வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில் ஓய்வெடுக்கச் சென்ற பிறகு கழகமே- மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் என்ற சரிநிகர் நிறைவு ஏற்பட்டது. இதோ இந்த ஒன்றரை ஆண்டு காலத்து நிலைமை என்னவென்றால் தமிழகமும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் என்ற சரிநிகர் நிறைவு ஏற்பட்டுள்ளது.

அதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது வாழ்க்கை என்பது கழகத்துக்காக மட்டுமல்ல;- தாய்த்தமிழ்நாட்டின் நலத்துக்கும் வளத்துக்கும் மிகமிக முக்கியமானதாக இப்போது இருக்கிறது.

கழகத்தின் வளர்ச்சி என்பதே தமிழ்நாட்டின் வளர்ச்சிதான். கழகமே தமிழகத்துக்கான உரிமைகளைப் பெற்றுத் தர முடியும். தமிழகத்தின் வளத்தைப் பெருக்க முடியும். அத்தகைய கழகத்தைக் காக்கும் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு வழங்கி இருக்கிறது. அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது இத்தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதுதான் கூடுதல் மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது.

தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையானதைச் சொல்லும் இடத்தில் மட்டுமல்ல;- செய்து தரும் இடத்தில் இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதுதான் முக்கியம். இரண்டும் மாபெரும் பணிகள். இரண்டும் மிகப்பெரிய பணிச்சுமைகள். ஆனால் அவை இரண்டையும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகச் சரிசமர் விகிதத்தில் கொண்டு செலுத்திக் கொண்டே இருக்கிறார் தலைவராகவும் முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அவர் முதல் முறை தலைவரான - 2018 ஆம் ஆண்டு முதலே கழகம் சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி ...வெற்றி...வெற்றி! வெற்றி செய்தியாகவே வந்து கொண்டு இருக்கிறது! இந்த வெற்றியைக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள் மக்கள்... மக்கள்...மக்கள்!

அவர் முதல்வர் ஆன - 2021 ஆம் ஆண்டு முதலே தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்ந்து வருகிறது என்ற தகவலே வந்து கொண்டு இருக்கிறது! இந்தப் பட்டங்களை – இந்தத் தேர்வுகளைச் செய்வது நாமல்ல. பெரும்பாலும் ஒன்றிய அரசுதான் இத்தகைய தகுதிக்குரியதாக தமிழ்நாட்டைத் தேர்வு செய்கிறது. வட இந்திய ஊடகங்கள் இப்படிக் கணிக்கிறார்கள். வட இந்திய ஆங்கில நாளிதழ்கள் இத்தகைய கட்டுரைகளைத் தீட்டுகிறார்கள். அதாவது தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்பவர்களால் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

‘நான் நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை விட மாநிலம் நம்பர் ஒன் ஆக வேண்டும்’ என்று சொல்லி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அப்படித்தான் ஆகிக் கொண்டு வருகிறது தமிழ்நாடு.

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு களங்களையும் எதிர்கொள்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள். இரண்டு களங்களிலும் தனது திறமையால் வென்று காட்டி வருகிறார்.

அமைதி – பொறுமை – நிதானம் - அடக்கம் ஆகிய தனிமனிதக் குணங்களும் .

கொள்கை – இலக்கு - உறுதி - இடைவிடாத முயற்சி - ஆகிய பொதுநிலைக் குணங்களும் .. கொண்டவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருப்பதால்தான் இரண்டையும் சமாளிக்கவும் முடிகிறது. இரண்டிலும் வெற்றியடையவும் முடிகிறது.

இந்த இரண்டு பொறுப்புகளும் அவருக்குச் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. ஐம்பதாண்டு கால உழைப்புக்குக் கிடைத்த மகத்தான வெகுமதிகள். மாண்புமிகு வெகுமதிகள், இத்தகைய பொறுப்புகள் அவரது தகுதியால், திறமையால், உழைப்பால் கிடைத்தவை. தலைவர் –- முதல்வர் பொறுப்புகளின் மூலமாக அவரது தகுதியும் , திறமையும், ஆற்றலும் முழுமையாகத் தமிழ்ச் சமுதாயத்துக்குக் கிடைத்து வருவதைத்தான் நாம் பார்க்கிறோம்.

இவை காலமெல்லாம் தொடர வேண்டும். அதற்கு தலைவர் வாழ்க! - தலைமுறைகள் கடந்து போற்றத்தக்க தமிழகத்தை உருவாக்க வாழ்க என்று வாழ்த்துவோம். அவரது வாழ்க்கையில்தான் கழகமும், தமிழகமும் அடங்கி இருக்கிறது என்பதால் கழகத்தவரோடு சேர்ந்து தமிழகத்தவர் அனைவரும் வாழ்த்துகிறார்கள்!

Also Read: திமுக அரசின் சாதனைக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? வாய்க்கு வந்­த­படி வடை சுடுகிறார் பழ­னி­சாமி!