M K Stalin

சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு  தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார்.

குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

=> தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தல் :

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், மதுரையில் சுப்பிரமணியபுரம்  திட்டப்பகுதியில் 62.68  கோடி ரூபாய் செலவில் 414 சதுர அடியில்  தூண் மற்றும்  9 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 396  புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 414 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை மற்றும் தெரு விளக்கு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.  மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன்  கட்டப்பட்டுள்ளன. 

மேலும், பயனாளிகளால் குடியிருப்பு நலச்சங்கம் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை நல்ல முறை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட தூய்மைப்  பணியாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு இக்குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசால் இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 210 திட்டப் பகுதிகளில் 74,522 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: தடை... அதை உடை... “கற்றனைத் தூறும் அறிவு” சிலை திறப்பு.. சிலை கூறும் செய்தி என்ன? - விவரம்!