M K Stalin

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 506 புதிய வீடுகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்! - முழு விவரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.02.2026) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை சென்னை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 6 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 29 கோடியே 17 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 4 கோடியே 59 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள  506 புதிய வீடுகள்  மற்றும் கோயம்பத்தூர், திருவள்ளூர், நாமக்கல், இராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 7 தொழிற்கூடங்களை திறந்து வைத்தார். 

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப் பின்னர், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன் காத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுவரும்  மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்கள் உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்பட்டு வருவதோடு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் இனி பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதை இவ்வரசு உறுதி செய்யும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததுடன், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 10,469 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவித்து, அதன்படி 28 மாவட்டங்களில் உள்ள 69 முகாம்களில் 10,469 புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, 628 கோடி ரூபாய் செலவில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக 3,510 புதிய வீடுகள் 186 கோடி ரூபாய் செலவில் 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, 3,510 புதிய வீடுகளும் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டு,  முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 3,959 புதிய வீடுகள் 236 கோடி ரூபாய் செலவில் 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, இவற்றில், ஏற்கனவே 9 மாவட்டங்களில் உள்ள 18 முகாம்களில் கட்டிமுடிக்கப்பட்ட 1904 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 2,055 வீடுகளில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் – பெத்திக்குப்பம், இராணிப்பேட்டை மாவட்டம் – பானாவரம், திருப்பத்தூர் மாவட்டம் – சின்னப்பளிக்குப்பம், சிவகங்கை மாவட்டம் – தாயமங்கலம், சென்னை மாவட்டம் - புழல் மற்றும் தென்காசி மாவட்டம் – ஆத்தியடிபிள்ளையார்கோயில் ஆகிய 6 முகாம்களில் 29 கோடியே 17 இலட்சத்து 34 ஆயிரம்  ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 506 புதிய வீடுகளுக்கு 4 கோடியே 59 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.  

மேலும், முகாம்களில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், தையற்கலை, இலங்கையின் பாரம்பரிய முறையிலான உணவுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் செலவில் 10 முகாம்களில் 10 தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு, அவற்றில் 3 தொழிற்கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது, கோயம்பத்தூர், திருவள்ளூர், நாமக்கல், இராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள  7 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 7 தொழிற்கூடங்களும் முதலமைச்சர் அவர்களால் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Also Read: ஓசூர் முதல் வேதாரண்யம் வரை... ரூ.317.73 கோடியில் மருத்துவக் கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!