M K Stalin
“தேர்தல் வரைக்கும் ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள்..” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில்
மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடெங்கும்
68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில்
நாம் நடத்தும் கூட்டங்களில் உறுதிமொழி எடுப்போம்!
செப்டம்பர் 20 ஆம் நாளன்று கழக மாவட்ட வாரியாக ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள்!
கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (09-09-2025) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், கழகத் தலைவர் அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்,படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின்வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிடுவதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றேன்.
இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு முன்,இது ‘ஹிட்’ அடிக்கும் என்று சொன்னேன்.சொன்ன மாதிரியே, 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து ‘சூப்பர் ஹிட்’அடித்துள்ளது!
இந்த வெற்றிப் பயணத்தை நிறைவு செய்துவந்தபோது, நீங்கள் எல்லோரும் வழங்கியவரவேற்புக்கு, இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய பயணங்கள் ஹிட் ஆவதற்குக் காரணம், நான் மட்டுமல்ல; எனக்குப் பக்கபலமாக இருக்கும் நீங்களும்தான் காரணம்! நீங்கள் இல்லாமல் நான் இல்லை; கோடிக்கணக்கான உடன்பிறப்புகளும் –தமிழ்நாட்டு மக்களும் இல்லாமல் நான் இல்லை!
தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நாம் விரைந்து அடைய வேண்டும் என்றால் - இந்தப் பயணங்களில் வெற்றியடைந்தால் மட்டும் போதாது. வரவிருக்கும் 2026 தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறவேண்டும்! இதற்கான அடித்தளமாகத்தான், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பைக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் நாள் தொடங்கினோம்.
சர்வாதிகார மனப்பான்மையோடு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக,தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க நீங்கள்எல்லோரும் களத்தில் சிறப்பாகப் பணியாற்றினீர்கள். மக்களின் நம்பிக்கையைப் பெறக் களத்தில் பணியாற்றிய அத்தனை நிர்வாகிகளிடமும், நான் பாராட்டினேன் என்றுசொல்லுங்கள்! ஏனென்றால், நான் மகிழ்ச்சியோடு சொல்றேன்… ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துள்ளோம்.
உங்கள் எல்லாருக்கும் – ஏன், உங்கள்மூலமாக கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொல்கிறேன்… தேர்தல் முடியும் வரைக்கும் “ஓய்வு” என்ற சொல்லையே மறந்துவிடுங்கள்!ஏனென்றால், 2026-ல் நாம் பெறப்போகும் வெற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கான வெற்றி!
எப்படிப்பட்ட ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கிறதென்று சாதாரணமாக டீக்கடையில் பேப்பர் படிப்போர் கூட உணர்ந்திருக்கிறார்கள். ஃபேக் நியூஸ் - டைவர்ஷன் பாலிட்டிக்ஸ்-என்று மக்களைக் குழப்ப எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்; அதுதான் அவர்களால் முடியும். மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் துணையோடு தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நம்மால்தான் முடியும்! அதற்கான வலிமையை நாம் பெறப்போகும் நாள்தான்,வரும் செப்டம்பர் 17. முப்பெரும் விழா!
அதற்கு முன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாள், 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் - அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, BLA, BDA, BLC-களின் கூட்டங்களை நடத்த வேண்டும். இது நிறைவு விழா கூட்டம் இல்லை; இதுதான் தொடக்கவிழா கூட்டம்!
தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக - ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நம்மோடு இணைந்திருக்கும் எல்லோரையும் - தேர்தல் வரைக்கும் நம்முடனே இணைத்துக்கொண்டு களப்பணியாற்ற வேண்டும். அதற்கான உறுதிமொழியை அந்தக் கூட்டங்களில் எல்லோரும் எடுக்க வேண்டும்.
முப்பெரும் விழாவில் – கழக உடன்பிறப்புகள் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் கரூர் நோக்கி திரண்டு வருவார்கள். எல்லோரும் பாதுகாப்பாகவந்து போவதை உறுதிசெய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். மேற்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் - மாவட்டக் கழகச் செயலாளருமான செந்தில்பாலாஜி அவர்கள்,விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். அத்தனை மாவட்டக் கழகச் செயலாளர்களும் செந்தில்பாலாஜி அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டும்.
முப்பெரும் விழா முடிந்த பிறகு, செப்டம்பர் 20-ஆம் நாள், ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை கழக மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும்.
நமது அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று அறுவடை செய்ய ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே!
அதற்கு நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், தேர்தல் நாள் வரைக்கும் பசி - தூக்கம் - ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள்! ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம்! 2026-லும் நாமே உதிப்போம்!
Also Read
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !