M K Stalin

“அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

உலகளவில் புத்தக வாசிப்பை போற்றும் வகையில், ஏப்ரல் 23ஆம் நாளான இன்று உலகப் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரிடமும் தொழில்நுட்பம் சென்றடைந்திருக்கும் வேளையில், புத்தக வாசிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என இந்நாளில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “புத்தகங்கள் - புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.

அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகங்களை எழுப்பி வருகிறோம்.

மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்!” என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தன்னை நேசிப்போரின் வாழ்க்கையை மாற்றிடும் வல்லமை கொண்ட புத்தகங்களை என்றென்றும் கொண்டாடுவோம்.

தமிழ்நாடு முழுவதும் மாபெரும் நூலகங்கள் அமைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழியில் வாசிப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”வெறுப்புணர்ச்சி வேண்டாம்” : பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகை ஆண்ட்ரியா கண்டனம்!