M K Stalin
புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.2.2025) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் சேலம் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
சேலம் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம்
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தில், துறைவாரியான பணிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், சேலம் வருவாய் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் அமையும் சேலம் (மேற்கு) பதிவு மாவட்டம் ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 20 கிராமங்கள், மேச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 4 கிராமங்கள் மற்றும் தருமபுரி பதிவு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 2 கிராமங்கள் ஆகியவற்றினை அச்சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பிரித்து மொத்தம் 26 கிராமங்களை உள்ளடக்கி சேலம் (மேற்கு) பதிவு மாவட்டத்தில் புதியதாக காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 4978 ஆவணங்கள் பதிவாகி சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம்
2024-2025-ஆம் ஆண்டிற்கான பதிவுத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம், ஓசூர் மற்றும் சூளகிரி வருவாய் வட்டங்களில் அமையும் கிருஷ்ணகிரி பதிவு மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 52 கிராமங்கள் மற்றும் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 15 கிராமங்கள் ஆகியவற்றினை அச்சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பிரித்து மொத்தம் 67 கிராமங்களை உள்ளடக்கி கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 8100 ஆவணங்கள் பதிவாகி சுமார் 54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்க இயலும்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!