M K Stalin

“நமக்கு கிடைத்திருக்கிற வெற்றி சாதாரண வெற்றி அல்ல!” : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை!

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமை இரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இன்று (26.01.2025) மதுரை மாவட்டம், வள்ளாலபட்டி கிராம மக்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக, நடத்திய போராட்டத்திற்கு நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய வெற்றியை அடிப்படையாக வைத்து, அந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு, திராவிட மாடல் ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல, வாழ்த்துச் சொல்ல, பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நேற்றைக்கு 30 பேருக்கு மேற்பட்டவர்கள் நம்முடைய அமைச்சர் திரு.மூர்த்தி அவர்களுடைய தலைமையில் சென்னை, கோட்டையில் வந்து என்னை சந்தித்தார்கள். சந்தித்தபோது சொன்னார்கள். உங்களுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறோம்.

நீங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய காரணத்தினால்தான், அதன்மூலம் அழுத்தம் தந்த காரணத்தினால்தான், இந்த வெற்றி நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, உங்களுக்கு நன்றி சொல்வதற்கு மட்டுமல்ல; நீங்கள் உடனடியாக ஒரு தேதி தரவேண்டும். அந்தத் தேதியை பயன்படுத்தி நாங்கள் உங்களுக்கு பாராட்டு விழா நடத்தப் போகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு எதற்கு பாராட்டு விழா, அது என்னுடைய கடமை என்று நான் சொன்னேன். இல்லை, இல்லை நீங்கள் வந்தே தீரவேண்டும் என்று என்னிடத்தில் கட்டாயப்படுத்தினார்கள்.

அன்பு கட்டளையிட்டார்கள். அவர்களுடைய அன்பு கட்டளையை நான் ஏற்றுக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன். இந்த விழாவை பொறுத்தவரையில், எனக்கு பாராட்டு விழா என்று நான் கருதவில்லை; உங்களுக்கு நடந்திருக்கக்கூடிய பாராட்டு விழாவாக தான் நான் கருதிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், நீங்கள் உறுதியாக நின்று குரல் கொடுத்தது மட்டுமல்ல, உங்கள் உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். போராட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்குத்தான் முதலில் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்காக நடைபெறுகிற பாராட்டு விழாவாக கருதாமல், உங்களுக்காக நடைபெறக்கூடிய பாராட்டு விழாவாகதான் நான் கருதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நான் வேறு, நீங்கள் வேறு என்று நான் பிரிக்க விரும்பவில்லை. இது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி. ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரைக்கும், டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் சக்தியோடு அதை நாம் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். அதற்கான மகிழ்ச்சி மிக்க வெற்றி விழாவாக இது அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய இந்த நேரத்தில், உங்கள் மகிழ்ச்சியில் நானும் கலந்து கொள்வதற்காக நான் உங்களை நோக்கி வந்திருக்கிறேன்.

உங்கள் முகத்தை எல்லாம் பார்க்கின்றபோது, முகமலச்சியை எல்லாம் பார்க்கின்றபோது, உங்கள் மகிழ்ச்சி, எழுச்சியை பார்க்கின்றபோது இங்கே இருந்து நீண்ட நேரம் உங்களிடத்தில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை வந்திருக்கிறது. ஆனால் நேரம் இல்லை. காரணம் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமானத்தைப் பிடித்து சென்னைக்குச் சென்று நாளைக்கு விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவேண்டிய அவசியத்திற்கு ஆளாகியிருக்கிறேன்.

சுருக்கமாக நான் உங்களிடத்தில் தெரிவிக்க விரும்புவது, இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக அரசைப் பொறுத்தவரைக்கும் என்னென்ன கொடுமைகளை, என்னென்ன அக்கிரமங்களை மக்களுக்கு விரோதமான செயல்களை எல்லாம் எதேச்சதிகாரமாக செய்து கொண்டிருப்பது என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். இன்றைக்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் இருந்து தலைநகராக இருக்கக்கூடிய டெல்லி நகரத்தை நோக்கி விவசாயிகள் பெரிய பேரணியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம், தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள் என்று நான் கருதுகின்றேன்.

ஏற்கனவே, இதே தலைநகர் டெல்லியில் குளிரிலும், வெயிலிலும் போராட்டம் நடத்தி, நூற்றுக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள் இறந்து போயிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அப்படி நடத்திய அந்த போராட்டம் எவ்வளவு நாட்கள் நடத்தப்பட்டது என்று கேட்டீர்கள் என்றால், 2 ஆண்டுகள் நடைபெற்றது. ஆனால், டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்பட்ட செய்தி வெளியான உடனே, நீங்களே போராட்டம் நடத்தினீர்கள். ஆனால், மூன்றே மாதத்தில் நீங்கள் வெற்றியை கண்டிருக்கிறீர்கள் அதுதான் முக்கியம். ஒன்றிய அரசு பணிந்து அதை இரத்து செய்திருக்கிறது. இதற்கு காரணம் மக்களாகிய நீங்களும், நம்முடைய தமிழ்நாடு அரசும் காண்பித்த மிகக் கடுமையான எதிர்ப்புதான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்போது நமக்கு கிடைத்திருக்கின்ற வெற்றி சாதாரண வெற்றி இல்லை, இது ஒரு மாபெரும் வெற்றி!

இந்த டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மூலகாரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், மாநில அரசு அனுமதி இல்லாமல், முக்கிய கனிம வளங்கள் ஒன்றிய அரசே ஏலம் விடலாம் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இதற்கு மூலகாரணம்! இந்த சட்டம் கொண்டு வருவதற்காக பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றிய நேரத்தில், அன்றைக்கு அதை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து அதை கடுமையாக எதிர்த்தோம்.

ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. என்ன செய்தது? அதை எதிர்த்தார்களா? இல்லை. அதுவும் குறிப்பாக மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கக்கூடிய தம்பிதுரை அவர்கள். அவர் என்ன பேசினார் என்று கேட்டால், இந்த சட்டத்தை ஆதரித்து, வரவேற்றுப் பேசியிருக்கிறார். அது எல்லாம் தொலைக்காட்சியில் வந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பார்த்திருப்பீர்கள். இதுதான் டங்ஸ்டன் பிரச்சினையின் தொடக்கப்புள்ளியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, 2 முறை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில், ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். அதையும் அரசியல் காரணங்களுக்காக சிலர் இன்றைக்கு மறைக்கப் பார்க்கிறார்கள். தொடக்கத்திலேயே நம்முடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு திட்டமிட்டு பொய்ப் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் எழுதிய கடிதங்களையும் மீறி, ஒன்றிய பா.ஜ.க அரசு ஏலம் விடுவதற்கான முயற்சியை செய்தார்கள். அதனால்தான் நாம் தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

குறிப்பாக, 23.11.2024 அன்று அரிட்டாப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டம், அந்த கூட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிராக தீர்மானம் போட்டார்கள். அப்போது மாண்புமிகு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். “இந்த திட்டத்தை அமைக்க முயற்சி செய்தால், நிச்சயமாக நம்முடைய முதலமைச்சர் அதற்கு அனுமதி தர மாட்டார் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு அரசு அதை தடுத்து நிறுத்தும்” என்று உறுதி அளித்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அதற்குப் பிறகு, 29.11.2024 அன்று மேலூரில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதை செய்தியில் பார்த்துக் கொண்டு, “டங்ஸ்டன் சுரங்கத்தை தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதிக்காது. இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சொன்னவர் யார்? இங்கே இருக்கக்கூடிய அமைச்சர் மூர்த்தி அவர்கள் அங்கு வந்து தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்த செய்தி எல்லாம் அப்போதைக்கப்போது என்னிடத்தில் தொலைபேசியில் பேசிவிட்டு, அதையெல்லாம் தொடர்ந்து இந்தக் கருத்துக்களை, உணர்வுகளை எல்லாம் தமிழ்நாடு என்ன நிலையில் இருக்கிறது, முதலமைச்சர் எந்த உணர்வோடு இருக்கிறார் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

காலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்றைய தினம் மதியமே பிரதமர் அவர்களுக்கு அவசரக் கடிதம் நானே எழுதியிருக்கிறேன். இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து நானே கடிதம் எழுதியிருக்கிறேன். அன்றைய தினம் மாலையில், நம்முடைய மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில், அனைத்து வணிகர் அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது. அதிலும், அரசின் சார்பில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு விளக்கி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில், 9.12.2024 அன்று டங்ஸ்டனுக்கு எதிரான தீர்மானத்தை நானே கொண்டு வந்தேன். சிலர் இந்த பிரச்சினையில் குறுக்குசால் ஓட்ட முயற்சி செய்தார்கள். அது வேறு, நான் அந்தப் பிரச்சனைக்கு அதிகம் செல்ல விரும்பவில்லை, நான் அரசியலாக்க விரும்பவில்லை. இதை அரசியலாக நான் நினைக்கவில்லை. இது நம்முடைய பிரச்சனை. ஆகவே, அரசியல் பிரச்சனையாக நான் கருதவில்லை. ஆனால், நான் மிகமிகத் தெளிவாக சொன்னேன். நான் ஒரு போர்ப்பிரகடனத்தை வெளியிட்டேன். நான் இருக்கின்ற வரையில் நிச்சயம் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. நாம் அனுமதி தந்தால்தான் அவர்கள் உள்ளே கொண்டு வரமுடியும். அதையும் மீறி வந்தால், நிச்சயமாக நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன் என்று அழுத்தந்திருத்தமாக சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

அதற்குரிய வாய்ப்பே நிச்சயம் இல்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதில் திட்டவட்டமாக இருக்கிறோம். இதுதான் எங்கள் முடிவு” என்று தெளிவாக எடுத்துச் சொன்னேன். அப்படி ஒரு சூழல் வந்தால், முதலமைச்சராக நான் இருக்க மாட்டேன்” என்று சொன்னபோதும் நம்முடைய அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஏன் அந்த வார்த்தையை சொல்லியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார்கள்.

எனக்கு அதுபற்றிய கவலையில்லை, பதவி பற்றி கவலையில்லை. மக்களைப் பற்றிதான் கவலை. மக்களுடைய பிரச்சனை தான் கவலை என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னேன். சட்டமன்றத் தீர்மானத்தையும், மக்களான உங்கள் உறுதியான போராட்டத்தையும் மதித்து, ஒன்றிய அரசு இப்போது இந்த ஏல அறிவிப்பை இரத்து செய்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், தீர்மானம் நிறைவேற்றுவதற்காக ஆதரித்து இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளுக்கும், பல்வேறு கட்சிகள் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எதிர்க்கட்சி, மாற்றுக்கட்சி, கூட்டணிக் கட்சி என்று பிரித்து பார்க்க விரும்பவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் உங்கள் சார்பாக, அதேபோல் இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை, வணக்கத்தை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகே தெளிவாக நான் சொன்னேன். “இது என்னுடைய அரசு இல்லை, இது உங்களுடைய அரசு” என்று சொல்லி இருக்கிறேன். என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன்.

Also Read: “நாங்கள் இருக்கிறோம், எதற்கும் கவலைப்பட வேண்டாம்” : அரிட்டாப்பட்டி மக்களிடம் முதலமைச்சர் உறுதி!