M K Stalin
உலக எய்ட்ஸ் நாள் 2024! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு செய்தி!
உலக அளவில் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வை வலுப்படுத்தும் நாளாக நாளை (டிசம்பர் 1), உலக எய்ட்ஸ் நாள் அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில் அதற்கான விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் “உலக எய்ட்ஸ் தினமாக" அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் "Take the Rights Path", அதாவது, "உரிமைப் பாதையில்" என்பதாகும்.
ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே, எச்.ஐ.வி/எய்ட்ஸை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இணைந்து, எச்.ஐ.வி தடுப்புப் பணியினை திறம்பட செயல்படுத்திய காரணத்தால், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் தேசிய அளவான 0.23 விழுக்காட்டிலிருந்து 0.16 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் "நம்பிக்கை மையம்" வாயிலாக எச்.ஐ.வி மற்றும் சிபிலீஸ் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் தொற்று இருப்பது, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தைக்கு நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு அரசின் எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறக்கட்டளை 2009-ஆம் ஆண்டு, ஐந்து கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஏற்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு இந்த அறக்கட்டளைக்கு இதுவரை 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அந்நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையின் மூலமாக ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் கல்வி உதவித்தொகை போன்றவற்றை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.
இதன்மூலம் 2023-24 நிதியாண்டில் 7,303 குழந்தைகள் பயன்பெற்றுள்ளார்கள். இத்திட்டம் நமது நாட்டிற்கே ஒரு முன்னோடித் திட்டமாகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடுச் சங்கம், இந்த ஆண்டின் சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த "ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12, 2024" வரையிலான நாட்களில் பொதுமக்களுக்குத் தீவிர விழிப்புணர்வு பிரச்சார சேவையினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இணையதளம் வாயிலாக நடத்தப்பெற்ற வினாடி வினா போட்டியில், 1,053 கல்லூரிகளிலிருந்து 24,171 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மேலும், தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் நாளன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டங்களில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு என நேரடி மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையினை உருவாக்கிட உறுதியேற்று எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டும், அவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!