M K Stalin

மகாராஷ்டிராவில் ராட்சத கிரேன் விழுந்து தமிழர்கள் 2 பேர் பலி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு !

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியின் ஷாஹாபூரி என்ற இடத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி அதிவிரைவுச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து தொழிலாளர்கள் பணிப்புரிந்து வந்தனர். இந்த் சூழலில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது.

அப்போது திடீரென ராட்சத கிரேன் ஒன்று விழுந்தது. இந்த கோர விபத்தில் சிக்கிய தொழிலாளிகள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து உடனடையாக மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த வந்த அவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அதில் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் (35) என்பவரும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்ததோடு நிவாரண நிதியும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் "மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் மேற்கொண்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: மத்திய பல்கலை.யில் சாதிய பாகுபாடு.. 4% பேராசிரியர் மட்டுமே OBC பிரிவினர்.. 85% பேராசிரியர் OC பிரிவினர் !