M K Stalin

“பசியோடு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக்கூடாது..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம் !

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைத்த பின் மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் சேர்ந்து காலை உணவும் சாப்பிட்டார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் முழுப்பயனை இன்றைய தினம் நான் பெற்றுவிட்டதாகவே நினைக்கின்றேன். பசித்த வயிறுகளுக்கு உணவாக; தவித்த வாய்க்கு தண்ணீராக; திக்கற்றவர்களுக்குத் திசையாக; யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருப்பதைப் போன்ற கருணை வடிவான திட்டம் தான் இந்த காலை உணவு வழங்கும் திட்டம்.

பள்ளிக்கு பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்குச் செல்லக் கூடிய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம். இப்போது பிள்ளைகள் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிடும் போது அடையும் மகிழ்ச்சியை அவர்களது முகங்களில் நான் பார்த்தேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. அவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும் போது என்னுடைய மனம் நிறைந்தது.

ஏழை, எளியோர் வீட்டுப்பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகள் எதன் காரணமாகவும் பள்ளிக்குச் செல்வது தடைப்படக் கூடாது என்பதற்காகவே திராவிட இயக்கத்தைத் தொடங்கினார் தந்தை பெரியார். அதற்காகவே சமூக நீதிக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி உரிமை எனும் இடஒதுக்கீடு தரப்பட்டது. வறுமையோ, ஜாதியோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நினைத்தார்கள். அவர்களது வழித்தடத்தில் வந்த நான், அவர்களது கனவுகளை நிறைவேற்றும் இடத்துக்கு வந்து அதனைச் செயல்படுத்தி வருகிறேன் என்பதை நினைத்து அளவிடமுடியாத மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறேன்.

* பள்ளிப் பிள்ளைகளுக்கு கல்வியுடன் சேர்த்து உணவும் வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை முதலில் வெளிப்படுத்தினார் பண்டித அயோத்திதாசர். அவரது பெளத்த சிந்தனையில் இது உதித்த இந்த யோசனையை 1900 ஆம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் சென்னை வட்டாரத்தில் உருவாகிய கர்னல் ஆல்கார்ட் பள்ளிகளில் மதிய உணவு வழங்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வித்திட்டார் பண்டிதர்.

* திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக இருந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர் சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது, ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு 1922 ஆம் ஆண்டு மதிய உணவை வழங்கினார். இந்த ஆயிரம் விளக்கு தான் முதன்முதலாக நான் வென்ற தொகுதி ஆகும்.

* இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நிதி நெருக்கடியைக் காரணமாகக் காட்டி மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது.

* 1955 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்தபோது மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பொதுக்கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தர வடிவேலு தான் இதற்கான முழு முயற்சியையும் எடுத்தவர். சில அதிகாரிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அதனை செயல்படுத்திக் காட்டியவர் பெரியாரின் பெருந்தொண்டரான நெ.து.சுந்தரவடிவேலு.

* இத்தகைய மதிய உணவுத் திட்டத்தை தி.மு.க அரசு தொடர்ந்து வந்தது. இதனை செழுமைப்படுத்தும் வகையில் கூடுதலாக ஊட்டச்சத்து திட்டத்தை 1971 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் கையில் எடுத்தார். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து வழங்குவதை மாபெரும் இயக்கமாக முதல்வர் கலைஞர் ஆக்கினார். அந்தக் காலத்தில் பேபி ரொட்டி என்பது குழந்தைகள் அனைவருக்கும் வழங்கியது கலைஞரின் அரசு. 1975 ஆம் ஆண்டு முழுமையாக மாநில அரசின் நிதியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை முதல்வர் கலைஞர் மாநிலம் முழுவதும் நடத்திக் காட்டினார்.

* இதனை மேலும் விரிவுபடுத்தினார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதிகப்படியான மையங்களை உருவாக்கி, சத்துணவுத் திட்டத்துக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

* 1989 ஆம் ஆண்டு சத்தான முட்டையை வழங்கினார் முதல்வர் கலைஞர். பின்னர் 2007 ஆம் ஆண்டு வாரத்துக்கு மூன்று முட்டை வழங்கினார் முதல்வர் கலைஞர். அத்துடன் கொண்டை கடலை, பச்சைப்பயிறு, வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் வழங்கினார். 2010 ஆம் ஆண்டு வாரம் ஐந்து நாட்களும் முட்டை வழங்கிய முதல்வர் கலைஞர் முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கினார்.

* முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார்கள்.

* இதுவரை இருந்தவை அனைத்தும் மதிய உணவுத் திட்டங்கள் தான். காலையிலேயே சாப்பிடாமல் தான் பிள்ளைகள் வருகிறார்கள் என்பது எனக்குச் சொல்லப்பட்டது. அப்படியானால் காலை உணவுத் திட்டம் தொடங்கியாக வேண்டும் என உத்தரவிட்டேன்.

பசியோடு பள்ளிக்கு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக் கூடாது என்று நினைத்தேன். இந்த வரிசையின் இன்றைய தினம் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

Also Read: “சிற்பி திட்டத்தின் நோக்கம் இதுதான்” : மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !