M K Stalin

“தேவர் பெருமகனார் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் அறிக்கை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பசும்பொன் தேவர் அவர்களின் 113-ஆவது ஜெயந்தியை முன்னிட்டும், 58-ஆவது குரு பூஜையை முன்னிட்டும் பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறேன்.

நாட்டு விடுதலைக்காகப் போராடிய தேவர் அவர்கள் தமிழ் மொழி மீது ஆழமான பற்றுக் கொண்டவர். தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காகத் தன் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர் தேவர் பெருமகனார் அவர்கள்.

மாபெரும் புகழுக்குச் சொந்தக்காரரான தேவர் பெருமகனுக்கு அவரது நினைவிடமான பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.

கழகம் ஆட்சியில் இருந்த போது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டது.

தேவர் பெயரில் அரசு கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மதுரையில் 13 அடி உயரத்திற்குத் தேவர் சிலை அமைக்கப்பட்டது

என்பதை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இளைஞர்களின் அன்பைப் பெற்ற தேவர் பெருமகனார் அவர்களின் புகழ் வாழ்க, வளர்க! அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!