M K Stalin

நீட் உள் ஒதுக்கீடு: அரசுப்பள்ளி மாணவர்களை கைக்கழுவி விடப்போகிறதா அரசு? -எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

இன்று (27-10-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்திருக்கும் ஆளுநருக்கு, மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்திட உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

Also Read: “பதவி சுகத்துக்காக மத்திய அரசிடம் மாநிலங்களின் உரிமையை அடகு வைத்த அடிமைக் கூட்டம்” - மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதில் "மயான அமைதி" காத்துவருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்குச் சற்றும் சளைத்திடாமல் ஆளுநரும் போட்டி அமைதி காக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உளப்பூர்வமாகக் கொடுத்த ஒத்துழைப்பைக் கூட நாகரீகம் இன்றி விமர்சனம் செய்யும் முதலமைச்சர், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்குப் பிரதமருக்கோ அல்லது உள்துறை அமைச்சருக்கோ அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க ஏனோ அஞ்சுகிறார்.

கவுன்சிலிங் துவங்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? ஏற்கனவே இரட்டை வேடம் போட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து “நீட்” தேர்வை, 2017 முதல் தமிழகத்தில் அனுமதித்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதாவையும் முதலமைச்சர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா? பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா முதலமைச்சர் பழனிசாமி?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “மருத்துவப் படிப்பில் இந்தாண்டே இடஒதுக்கீட்டை உறுதி செய்க” - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!