M K Stalin
கே.ஆர்.நாராயணனின் சமூகநீதி தீபத்தை கையில் ஏந்தி செல்லவேண்டிய காலகட்டமிது - நினைவுக்கூர்ந்த மு.க.ஸ்டாலின்
"முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்த நாள் நூற்றாண்டு இன்று! இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், முத்தமிழறிஞர் கலைஞரால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றவர்.
அவர் குடியரசுத் தலைவரான போது "நமது ஜனநாயகத்தில் நலிந்த பிரிவினரின் வெற்றிச் சரித்திரத்தையும், சமூகநீதியின் புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் மனமார வாழ்த்தியது, இன்றும் என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
அவரை அழைத்து வந்து, தமிழ்நாட்டில் கழக ஆட்சியில் துவங்கப்பட்ட சட்டப் பல்கலைக் கழகத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக “அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டி, திறந்திடவும் செய்தார் கலைஞர். பிறகு திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் நிரம்பியிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தையும் மரியாதைக்குரிய கே.ஆர்.நாராயணன் தான் திறந்து வைத்தார்.
மறைந்த குடியரசுத் தலைவருக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் மிக நெருக்கமான, உணர்வுபூர்வமான, ஆழமான நட்புறவு மிளிர்ந்து கொண்டிருந்ததை நானறிவேன். கே.ஆர்.நாராயணன் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய கனவுகள் நிறைவேற, தொடர்ந்து பாடுபடுவோம்! அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு : கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம்!
-
தவெக அரசு அறிவித்த குறுவை சிறப்புத்தொகுப்பு விவசாயிகளை சென்றடையவில்லை! : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
அந்த 3 கோப்புகளையும் திறந்து பாருங்கள் : பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் Open Challenge!
-
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் : சோகத்தில் திரையுலகம்!
-
த.வெ.க அரசை எதிர்க்கும் சி.பி.எம் : நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - காரணம் என்ன?