M K Stalin

திமுக பொதுக்குழுக்கூட்டம்: “காணொலியில் கூடுவோம்; கழகத்தின் கொள்கை கீதம் பாடுவோம்!” - மு.க.ஸ்டாலின் மடல்

தி.மு.கழக பொதுக்கூட்டம் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு, திமு.க. தொண்டர்களுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டிருப்பதின் விவரம் பின்வருமாறு:-

“இது ‘முப்பெரும் விழா’ மாதம்! ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார்- தமிழரின் தன்மானம் காத்த பேரறிஞர் அண்ணா; இருவரும் பிறந்த மாதம். பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு - தலைவர் கலைஞர் அவர்களால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட மாதம். இந்த மூன்று விழாக்களையும் ஒன்றிணைத்து ‘முப்பெரும் விழா’வாகக் கொண்டாடும் பாங்கை நமக்கு வழங்கியவர், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழாக்களும் மாநாடுகளும், கூடிக் கலைவதற்கானவைகளல்ல. அவை, "கூடிக் கலையும் காகங்கள் அல்ல; கூடிப் பொழியும் மேகங்கள்". அங்கே கொள்கை முழக்கங்கள் எதிரொலிக்கும் . அவை, தமிழ்நாட்டு மக்களின் தன்மானத்தையும், தனிப்பெரும் முன்னேற்றத்தையும், நலனையும், காக்கும் அறப்போர்க் களத்திற்கு ஆயத்தம் செய்பவை.

விழாக்களையும், மாநாடுகளையும் உடனடியாக நடத்திட முடியாது என்பதால், முறைப்படி கூடுகின்ற செயற்குழு - பொதுக்குழுக் கூட்டங்களில் அதற்கான தீர்மானங்கள் ஒப்புதல் பெறப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, அதனை விழாக்களிலும் மாநாடுகளிலும் முன்னெடுத்து, கழகத்தின் கடைசித் தோழருடைய கடமை உணர்ச்சி மிளிரும் பங்கேற்புடன், சீரும் சிறப்புமாகச் செயல்படுகின்ற திராவிட ஜனநாயக இயக்கம்தான் தி.மு.கழகம். அந்த உணர்வுடன்தான் செப்டம்பர் 9 அன்று கழகப் பொதுக்குழு கூடுகிறது.

சென்னை - அண்ணா அறிவாலயம், ‘கலைஞர் அரங்கத்தில்’, தேனடை போல் கூடும் உங்கள் திருமுகங்களைக் காண்பது வழக்கம். ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது ஏற்படும், இயக்கம் எனும் குடும்பப் பாச உணர்வுக்கு இணையே இருக்காது. அத்தகைய உணர்வுகள் பரவிடும் வாய்ப்பை, இந்தக் கொரோனா காலம் நமக்கு வழங்கிடவில்லை. அதனால், கழகத்தின் நீண்ட வரலாற்றில் முதன்முறையாகக் காணொலி மூலம் கழகத்தின் பொதுக்குழு நடைபெறவிருக்கிறது.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்த மார்ச் மாதத்திலிருந்தே கழக உடன்பிறப்புகளை, காணொலி வாயிலாகத் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சி கொண்டு வருகிறேன். பேரிடர் காலத்தில் மக்களை எவ்வாறேனும் முயன்று காத்திட வேண்டும் என்ற மகத்தான செயல்திட்டத்துடன் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் பெயரில், தமிழகம் முழுவதும் கழகத்தினர் மேற்கொண்ட நலப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் அவற்றால் பலன் பெற்றவர்கள் குறித்த விவரங்களைக் கேட்டறியும் வகையிலும், காணொலி நிகழ்வுகள் அமைந்தன.

அதனைத் தொடர்ந்து, கழகத்தின் மூத்த நிர்வாகிகளுடனான உரையாடல்கள், மாவட்டக் கழக நிர்வாகிகளுடனான சந்திப்புகள், கழகத்தில் உள்ள அணிகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், கழகத்தின் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு எனக் காணொலி நிகழ்வுகள் இல்லாத நாளே இல்லை என்று எடுத்துச் சொல்லும் வண்ணம், கழகப் பணிகள்; நடுநிலையாளர்கள் போற்றத்தக்க வகையில், செம்மையாக நடைபெற்று வருகின்றன.

கழகத்தினருடன் மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழர்களின் நிலவரம் அறியவும், முன்களப் பணியாளர்களாகச் செயல்படும் மருத்துவத்துறையினரின் தேவைகளை அறியவும், விவசாயிகள் - வணிகர்கள் - பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் பண்பட்ட கருத்துகளைக் கேட்டிடவும், காணொலி நிகழ்வுகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.

அண்மையில்கூட, சூழலியலைத் தகர்க்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, கழகம் முன்னெடுத்த காணொலிக் கருத்தரங்கில் பங்கேற்று, இயற்கை ஆர்வலர்கள்- வல்லுநர்களுடன் உரையாடினேன்; இந்தக் கருத்தரங்கம் அகில இந்தியக் கவனத்தை ஈர்த்தது.

கொரோனா பேரிடர் காலத்திலும் மக்கள் நலன் குறித்துச் சிந்திக்காத மத்திய - மாநில அரசுகளின் வஞ்சகப் போக்கின் அடையாளமாக விளங்கும் ‘நீட்’ தேர்வுகள், ‘ஆன்லைன்’ வகுப்புகள், புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு, இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு, வரிசையாக மாநில உரிமைகள் பறிப்பு, சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை, கொரோனாவின் பெயரால் நடைபெறும் கொடுமையான ஊழல் சுரண்டல்கள், சிதைந்து சீரழிந்து வரும் சட்டம் - ஒழுங்கு, பெண்கள் - முதியோர் - குழந்தைகள் ஆகியோர்க்குப் பாதுகாப்பற்ற நிலைமை, ஒவ்வொரு நாளும் குற்றங்கள் அதிகரிப்பு என, அனைத்து அவலங்களையும் காணொலி வாயிலாகக் கழகம்தான் மக்கள் மன்றத்தின்முன் வெளிப்படுத்துகிறது.

நாள்தோறும் நாட்டு நலன் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றும் கழகத்தின் பணிகளை, மேலும் பரவலாக்கிடவும், அதற்கேற்ற கட்டமைப்பை வலுப்படுத்திடவும், கலந்தாலோசனைகளை மேற்கொண்டிட, கழகப் பொதுக்குழு காணொலியில் கூடுகிறது.

நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் கொள்கைச் சகோதரனாகத் தோளோடு தோள் நின்று, கழகத்தின் பொதுச்செயலாளராக நெடுங்காலம் பணியாற்றி இயக்கம் வளர்த்த, இனமானப் பேராசிரியர் அவர்களின் மறைவுக்குப் பிறகு, பொதுச்செயலாளர் பொறுப்புக்கு நமது பேரன்புக்குரிய அண்ணன்- கழகத்தின் மூத்த முன்னோடி- பேரறிஞர் அண்ணா அவர்களின் பாசத்திற்குப் பாத்திரமான - தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கு நெருக்கமான - துரைமுருகன் அவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்.

அதுபோலவே, நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும், உங்களில் ஒருவனான நானும், மதிப்பிற்குரிய சாதிக் அவர்கள், ஆற்காட்டார் அவர்கள் ஆகியோரும் வகித்திட்ட பொருளாளர் பொறுப்புக்கு, கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் - முத்தமிழறிஞர் கலைஞரின் பட்டாளத்துச் சிப்பாயாகச் சிறப்புறச் செயலாற்றும் ஆற்றல் வீரர் - அன்புச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் விண்ணப்பித்திருக்கிறார். கழகப் பொதுக்குழுவில் இதற்கான ஒப்புதலை முறைப்படி பெற்ற பிறகு, அவர்கள் இருவரும் இந்தப் பொறுப்புகளை ஏற்கும் இனிய தருணம் நிகழவிருக்கிறது.

கழகப் பொதுக்குழு என்பது, உள்கட்சி ஜனநாயகத்திற்கான உயர்ந்த உரைகல். கழக வளர்ச்சிக்கு, ஆக்கப்பூர்வமான-ஆணித்தரமான கருத்துகளைப் பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்துரைக்கும் வாய்ப்பினை பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர் வழங்கினார்கள். அவர்தம் அடிச்சுவட்டில், காணொலி பொதுக்குழுவிலும், கழகத்தின் உண்மையான - உறுதியான வளர்ச்சிக்கேற்ற, பொலிவும் பொருத்தமும் வாய்ந்த கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைத்து உறுப்பினர்களின் மனக்குரலாக, ஒவ்வொரு கழகத் தொண்டரின் மனசாட்சி எதிரொலியாக, பொதுக்குழுவில் பேசுகின்ற வாய்ப்பு பெறுவோரின் கருத்துகள் அமைவதே கழகத்தில் வழக்கம். அது இந்தக் காணொலி நிகழ்விலும் தொடரும்.

Also Read: பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக செப்.,9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு - தலைமைக்கழகம் அறிவிப்பு!

அவரவர் மாவட்டத்திலும் காணொலி நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் எவை என்பது, முரசொலியில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட - ஒன்றிய - நகர -பேரூர் - கிளைக் கழகங்களுக்கும், அது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அவரவர் பங்கேற்க வேண்டிய இடங்களுக்கு, பொதுக்குழு கூடுகின்ற நேரத்திற்கு முன்பாகவே சென்று, அலைபேசியினைக் கட்டாயம் தவிர்த்து, காணொலித்தளத்தில் இணைந்ததைப் பதிவு செய்து, முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜனநாயகக் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் பாசறையாக அமையவிருக்கிறது; கழகப் பொதுக்குழு. அதில் உங்களின் ஒருமனதான ஆதரவுடன் நிறைவேறவிருக்கிற தீர்மானங்கள், கழகத்தின் செயல்பாடுகளை மேலும் திடப்படுத்தி வலுப்படுத்தும். அந்த வலிமையும் - அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் நாம் பெறப்போகும் வெற்றிக்குக் கட்டியம் கூறும். அந்த வெற்றி முழக்கத்தை, நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில் உரக்க ஒலிப்பதற்கான, கொள்கை முழக்கக் களமான பொதுக்குழுவில் பங்கேற்றிட, உங்களில் ஒருவனாக உவகை பொங்கிட அழைக்கிறேன்!” இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: NEP: நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன்பே ஆளுநர்களின் கருத்தை கேட்க துடிப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் ஆவேசம்!