M K Stalin

’அலங்கோலமான எடப்பாடி ஆட்சிக்கு கோலத்தை பார்த்தாலும் பயம்’ : மாணவர்களின் கைதுக்கு மு.க ஸ்டாலின் கண்டனம் !

NRC மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை போலிஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலிஸாரின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனங்களுக்கு ஆளானதால் கைது செய்யப்பட்டு சமூக நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட மாணவர்களை எடப்பாடியின் காவல்துறை விடுவித்தது.

இது குறித்து, குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து கோலம் போட்டு எதிர்ப்பை தெரிவித்த மாணவர்களை கைது செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், ”அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது மற்றுமொரு உதாரணம். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது” என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் 6 பேர் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும், மனித உரிமைகளை மண்புழு அரசு மதிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு கோலத்தைக் கண்டு கூட அஞ்சும் அளவிற்கு அடிமை அ.தி.மு.க அரசின் ஆட்சி இருக்கிறது. அரசின் இந்த மோசமான போக்கைக் கண்டித்து, மக்கள் தங்கள் வீட்டின் முன் கோலம் போட்டு இந்த கருப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்கிற வகையில் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read: CAA, NRC சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட கல்லூரி மாணவர்களைக் கைது செய்த எடப்பாடியின் ’ஏவல்’ காவல்துறை