M K Stalin

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் : பரப்புரையில் மு.க ஸ்டாலின் உறுதி !

அடிமை ஆட்சியின் அக்கிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முன்னோட்டமே இந்த இடைத்தேர்தல் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின்போது குறிப்பிட்டு பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து அத்தொகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

கப்பியாம் புலியூரில் பெண்கள் முன்னிலையில் இன்று (அக்.,13) காலை திண்ணைப் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் பிரச்னைகளான சாலை வசதி, ரேசன் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, தண்ணீர் பஞ்சம் போன்றவை ஏற்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் என உறுதியளித்தார்.

அதன் பின்னர், பனையபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தே.மு.தி.க, பா.ம.க, அ.ம.மு.க உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்த பலர் தங்களை மு.க.ஸ்டாலின் தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர்.

இதனையடுத்து விக்கிரவாண்டி சாலையில் நடைபெற்ற திண்ணைப் பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பா.ஜ.க ஆட்சி புரிகிறது என்றும், அ.தி.மு.க.,வினரால் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தான் கொள்ளையடித்துள்ள ஊழல் பணங்களை பதுக்குவதற்காகவே முதலமைச்சரும் அவரது அமைச்சரவை சகாக்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதாக குற்றஞ்சாட்டி பேசினார்.

முன்னதாக, அகில இந்திய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் 3ம் இடம் பிடித்த கப்பியாம் புலியூரைச் சேர்ந்த தீனா நன்மாறனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.