M K Stalin

“மோடி ஜி ஜின்பிங் சந்திப்பு இனிதாக அமையட்டும்” - மு.க.ஸ்டாலின் பேட்டி!

இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து முறைசாரா ஆலோசனை நடத்தவுள்ளனர். அதற்காக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்து பாதுகாப்பு கெடுபிடிகள் பலமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவிட்டு சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் நடத்தப்படும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனைக் கூட்டம் இனிதாகவும், பயனுள்ளதாகவும் அமையவேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியுமா என்ற கேள்விகளுக்கான பதில் அறிக்கையில் தெளிவாக இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க மகத்தான வெற்றியைப் பெறும்” எனத் தெரிவித்தார்.