M K Stalin
“மக்கள் தலைவர்களின் சிலைகளை சிதைக்க முயல்வோரின் அற்பச் சிந்தனைகளை அகற்றிடுவோம்” : மு.க.ஸ்டாலின் அறிக்கை!
வேதாரண்யத்தில் சாதிய பிரிவினையால் அண்ணல் அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
“அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அறிவுலக மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயல் மிகக் கடும் கண்டனத்திற்குரியது.
நாடு முழுவதும் தலைதூக்கிவரும் சாதி - மத வெறித்தனங்கள், அவற்றிற்கு ஊக்கமளித்திடும் சனாதன சக்திகள், தமிழகத்திலும் அண்மைக்காலமாகத் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டுதான் வேதாரண்யத்தில் நடந்திருக்கும் வேதனை. ஜனநாயக அரசியல் என்கிற முகமூடி அணிந்துள்ள பாசிச சக்திகள் விதைக்கும் விஷ விதைகள் முளைக்கின்ற காரணத்தால் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலைகளை சிதைப்பதும் தலையைத் துண்டித்து ஆனந்தப்படுவதுமான ஆபத்து தொடர் நிகழ்வாகி வருகிறது.
இத்தகைய வன்முறையாளர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களின் கோரவெறியைக் கட்டிப்போட்டுக் கட்டுப்படுத்தும் கடமை உணர்வை மாநில உளவுத்துறை இழந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை பலமாக ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழ்கின்றன.
சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும்.
வேதாரண்யத்தில் சிதைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலை, சீரமைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அங்கு மெல்ல மெல்ல அமைதி திரும்புகிற நல்ல அறிகுறியின் வாயிலாக மதவெறி - சாதிவெறி சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் தருகிறது.
தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட வேண்டிய அவசர அவசியத் தேவையை உணர்ந்து, அ.தி.மு.க. அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சுமூகமான நல்லிணக்க வாழ்வை மேற்கொண்டு வரும் தமிழக மக்களை, வகுப்புவாத - சாதியவாத வெறியர்களுக்கு இரையாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற - சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
அந்தப் பணியை எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் மேற்கொண்டிட தி.மு.கழகம் உறுதி பூண்டுள்ளது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட மக்களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தலைவர்களின் சிலைகளை சிதைக்க முற்படுவோரின் அற்பச் சிந்தனைகளை அகற்றியெறியும் பணிகளைத் தி.மு.க. தனது தோழமை சக்திகளுடன் இணைந்து மேற்கொள்ளும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!