M K Stalin

வேலூரில் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைப்பு : ஜனநாயகத்தை நசுக்கும் போக்கு என கண்டனம்!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வேலூர் தொகுதிக்குட்பட்ட கே.வி.குப்பம், வாணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகளிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.

இந்நிலையில், ஆம்பூரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தனியார் மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அமைப்பினருடன் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக வந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சியின் அழுத்தத்தாலேயே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளதாக கூறிய மண்டபத்தின் உரிமையாளர், இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலையொட்டி ஜனநாயக முறைப்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மண்டபத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தது ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு சேவகம் செய்யும் போக்கு என விமர்சனங்கள் எழுந்துள்ளன.