M K Stalin

ஏன் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்.. மழுப்பல் பதில் சொன்ன எடப்பாடி 

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் இன்று பதினெட்டாம் நாளாக தொடர்கிறது. அத்தி வரதர் வழிபாட்டுக்காக பல மாநிலங்களிலிருந்து அதிக அளவில் மக்கள் வருகை தந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் பலி ஆகியுள்ளனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது, அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால் அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். 4 பேர் இறந்துள்ளனர், 31 பேர் மயக்கமடைந்துள்ள செய்தி அரசுக்கு வந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர், பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திவரதரை தரிசிக்க, இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை; திருப்பதியில் கூட 75,000 பேர் தான் தினமும் வருகின்றனர். அத்திவரதரை நாள் ஒன்றுக்கு 1 முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்தவர்கள் இறந்தது குறித்து விவரமான பதிலை பின்னர் அளிப்பதாக கூறினார்.

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.