M K Stalin

21 மாதங்களாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளது அ.தி.மு.க அரசு : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசிய அவர், “1.2. 2017 அன்று நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஏகமானதாக 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் உண்மை தகவல்களை கொடுக்காமல் சட்டப்பேரவையில் மறைத்திருக்கிறார்.

அரசியல் சட்டப்படி குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை 6 மாதத்திற்குள் மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வலியுறுத்த முடியும். ஆனால் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டு 19 மாதங்கள் ஆகியுள்ளதால் அந்த வாய்ப்பும் தற்போது பறிபோய்விட்டது. 21 மாத காலமாக மக்களை இந்த அரசு ஏமாற்றியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்போம் என்று மக்களை ஏமாற்றி தமிழக மக்களுக்கு பச்சைத் துரோகம் செய்துள்ளது இந்த அரசு. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டத்துறை அமைச்சர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய விளக்கம் திருப்தி அளிக்காததால் தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு பேசிய மு.க.ஸ்டாலின், “19 மாதத்திற்கு முன்பே வந்த கடிதம் குறித்து ஏன் பலமுறை சட்டமன்றம் கூடியிருந்தும் ஏன் தெரிவிக்கவில்லை? நேற்று முன்தினம் நீட் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியபோதும் கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கவில்லை.

சட்டத்துறை அமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெளிவான பதில் அளிக்காத காரணத்தால் தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.