M K Stalin

தேர்தல் விதிமுறை மீறல் இல்லையா? - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஜூலை 1 முதல் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் ஜூலை 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சட்டமன்றத்தில் அமைச்சர்கள் புதிய திட்டங்களை அறிவித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சட்டப்பேரவையில் புதிய திட்டங்களை அறிவிப்பது தேர்தல் விதிமுறை மீறல் இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் இன்று சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து அவர் பேசியதாவது :

“சேலம் உருக்காலை மூலம் 8 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மத்திய அரசின் செயல்பாட்டால், இந்த ஆலை நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை சந்தித்து சேலம் உருக்காலை தனியார் மயமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.” எனப் பேசியுள்ளார்.

சேலம் இரும்பு உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்க டெண்டர் வெளியிட்டதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.