M K Stalin

தமிழக வரலாறு தெரியாமல் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கோவை பாப்ப நாயக்கன்பாளையத்தில் தி.மு.க முன்னோடிகள் மு.இராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரது படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திருவுருவ படங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் சிறப்புரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க.வின் முன்னோடிகளாக இருந்த இருபெரும் தலைவர்களின் திருவுருவ படங்களை திறந்துவைத்துள்ளோம். திராவிடத்தின் பல்கலைக்கழகமாக விளங்கியவர் மு.இராமநாதன். தி.மு.க.விற்காக அவர் தொடர்ந்து பாடுபட்டிருக்கிறார். அவர் ஆற்றிய பணிகளை ஒருபோதும் நாம் மறந்துவிட முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றவர் மு.ராமநாதன். தமிழக மக்கள் நலனுக்காக, தமிழ் மொழிக்காகவும் 27 முறை சிறை சென்றவர் மு.ராமநாதன். சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கோவை மாநகருக்கு பல அரும்பணிகளை செய்துள்ளார். அன்பகத்தில் இளைஞரணி செயல்படுவதற்கு முழுமுதற் காரணமாக விளங்கியவர் மு.ராமநாதன்.

அதேபோல், க.ரா.சுப்பையன் அவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டவர். ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது தி.மு.கவிற்கு பெருமை தேடித்தந்தவர் க.ரா.சுப்பையன். தனது ராஜ்யசபா உறுப்பினர் நிதியிலிருந்து முழுமையாக மக்களுக்கு உதவியுள்ளார். இருவரும் சரித்திர நாயகர்கள். நமக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கியவர்கள்.

தற்போது மத்திய அரசு புதிய கல்வி கொள்கை மூலம் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது. கடந்த கால தமிழக வரலாற்றை உணராமல் அவர்கள் இதை செய்துள்ளனர். புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை கண்டித்து தி.மு.க சார்பில் கண்டனங்களை நான் தெரிவித்தேன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட இருவரின் திருவுருவ படங்களை திறந்து வைத்திருப்பது இச்சமயத்திற்கு பொருத்தமானது" இவ்வாறு அவர் பேசினார்.