India

“எங்களுக்கு நீதி கிடைக்காது...” - டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் விடுவித்தது.

இதனை எதிர்த்து சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஸ்வர்ணகாந்தா சர்மா முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஸ்வர்ணகாந்தாவின் பிள்ளைகள் ஒன்றிய அரசு வழக்கறிஞர்களாக உள்ளதால், ஒன்றிய அரசுக்கு சதகமாக நீதிபதி செயல்படு வாய்ப்புள்ளதாகவும், இதனால், வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வர்ணகாந்தா தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஸ்வர்ணகாந்தா, வழக்கு விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ள கெஜ்ரிவால், நீதிபதி ஸ்வர்ண்காந்தா சர்மாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலும் தகர்ந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தனது மனசாட்சிக்கு செவிசாய்த்து, காந்திஜியின் கொள்கைகளைக் கடைப்பிடித்து, சத்யாகிரக உணர்வுடன் — நீதிபதி ஸ்வர்ண்காந்தா முன் தான் ஆஜராகப்போவதில்லை என்றும், எவ்வித வாதங்களையும் முன்வைக்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில், நேரடியாகவோ, வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராவதால், அர்த்தமுள்ள எந்த விளைவுகளும் ஏற்படாது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், நீதிபதி ஸ்வர்ணகாந்தாவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Also Read: “திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!