India

பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 3 வயது சிறுமி இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஒன்றரை மாதங்களாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இச்சம்பவம் குறித்து முறையிட்டார்.

இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி , இது குறித்து விசாரிப்பதாக உறுதி அளித்தார். 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரும் மனு நாளை உச்சநீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் இந்த வழக்கில் கைதுசெய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடிவருகிறது. வழக்கு தற்போது போக்சோ வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: ”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!