India

"புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதையான செயல்" : ராகுல் காந்தி கண்டனம்!

தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நள்ளிரவில் முடிவு செய்திருப்பது பிரதமரும், உள்துறை அமைச்சரும் மேற்கொண்ட, அவமரியாதையான செயல் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், ”தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளநிலையில், தற்போது அவசரம் காட்ட வேண்டாம் என்றும், தீர்ப்பு வந்த பிறகு நியமித்து கொள்ளலாம் என்றும் தாம் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,இதுதொடர்பாக தனது மறுப்பு குறிப்பு ஒன்றையும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் அளித்தேன் எந்தவித தலையீடும் இல்லாத சுதந்திர அமைப்பாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் மிக முக்கிய அம்சமே, தேர்தல் ஆணையர்கள் தேர்வு நடைமுறை என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கியது கண்டனத்திற்குரியது என்று ராகுல்காந்தி சாடியுள்ளார். தேர்தல் நடைமுறையின் நேர்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலையை மோடி அரசு அதிகப்படுத்தியுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்தும் அரசை ஒன்றியத்தில் அமைய செய்வதே தனது முதல் கடமை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தி திணிப்பு : “எல்லாப் படையெடுப்புகளையும் தமிழ்நாடு தடுக்கும்...” - முரசொலி !