India

”5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு தொழில்நுட்பம்” : முதலமைச்சர் அறிவிப்புக்கு ராகுல் காந்தி புகழாரம்!

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே ’உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’ தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது! இப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000-ஆம் ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம் ஆகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்ததெல்லாம் இலக்கியப் புனைவுகள் அல்ல; அரசியலுக்காகச் சொன்னவை அல்ல; எல்லாம் வரலாற்று ஆதாரங்கள். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்று மெய்ப்பிக்க வேண்டிய கடமையை நம்முடைய திராவிட மாடல் அரசு எடுத்துக் கொண்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பெருமையை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ” தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாட்டை உறுதி செய்த சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இரும்பு யுகத்தில் இந்தியாவின் ஆரம்பகால முன்னேற்றங்களை காட்டுகிறது. தமிழ்நாட்டின் பங்களிப்புகள், நம் நாட்டு எண்ணற்ற மைல் கற்களுடன் இந்தியாவின் புதுமை, ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” : ஆதாரங்களுடன் அறிவித்த முதலமைச்சர்!