India

”சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்றாலே ஒன்றிய அரசுக்கு ஒவ்வாமை” : டி.ஆர்.பாலு MP குற்றச்சாட்டு!

இந்திய அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இன்று மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய டி.ஆர்.பாலு MP,”அரசியல் சாசன முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரத்துவம், மதச்சார்பின்மை குறித்த அம்சங்கள், குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறவில்லை.சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்ற சொற்கள் ஒன்றிய அரசுக்கு ஒவ்வாமையாக உள்ளது.

சகோதரத்துவம், மதச்சார்பின்மை வெறும் சொற்கள் மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடைக்கிய சமத்துவ சமுதாயத்திற்கான அடைப்படை. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சமூக ரீதியாக பின்தங்கிய மக்களுக்காக பாடுபட்டனர்.

கேரள மாநிலம் வைக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை நேற்று திறந்து வைத்தார். வைக்கத்தில் கோயில் தெருக்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் நடக்கக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதனை எதிர்த்து தந்தை பெரியார் போராடினார்.

அனைவரும் கோயில் தெருக்களில் நடக்க வழிவகை செய்து சமூக நீதியை நிலைநாட்டியவர் தந்தை பெரியார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திராவிடத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தான் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கான முன்னோடி முயற்சியாக அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: பாஜகவுடன் கள்ளக்கூட்டணி : இஸ்லாமியர்களுக்கு அதிமுகவின் மற்றொரு துரோகம்... அம்பலப்படுத்திய அமைச்சர் நாசர்!