India

அம்பலமாகும் குஜராத் மாடல் : போலி நீதிமன்றத்தைத் தொடர்ந்து போலி மருத்துவ வாரியம்!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு கும்பல் போலி மருத்துவ வாரியம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பான தகவல் அடிப்படையில் சூரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த மருத்துவமனையை நடத்தி வரும் மருத்துவர்கள் காண்பித்த பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போலியானது என்பது தெரிய வந்தது. பி.இ.எச்.எம். மருத்துவ படிப்புக்கான பட்டப்படிப்பு குஜராத்தில் இல்லாத நிலையில், அவர்கள் காண்பித்த மருத்துவப்படிப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, மருத்துவ படிப்புக்கான சான்றிதழை டாக்டர் ராவத் மற்றும் ராஜேஷ் குஜராத்தி ஆகியோர் விற்பனை செய்தது தெரிய வந்தது. எலக்ட்ரோ ஹோமியோபதி போர்டு என்ற ஒன்றை தனியாக தொடங்கி அதன் மூலம் போலிச் சான்றிதழ்களை 70 ஆயிரத்துக்கு இவர்கள் விற்பனை செய்துள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ராவத் மற்றும் ராஜேஷ் குஜராத்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ராவத் ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டப்படிப்பும், ராஜேஷ் ஹோமியோபதியில் டிப்ளமோவும் படித்தவர்கள். எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்த வித கட்டுப்பாடோ அல்லது விதிகளோ இல்லை என்பதால் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜேஷ் குஜராத்தி அகமதாபாத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி போர்டு என்று ஒன்றை தனியாக தொடங்கி அதன் மூலம் போலி சான்றிதழ்களை 70 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கியுள்ளனர். சான்றிதழ்களை வாங்கியவர்கள் பதிவு செய்து கொள்ள சொந்தமாக ஒரு இணையதளமும் வைத்திருந்தனர். அதில் 1630 பேர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த போலி சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் அடிப்படையில் 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் பணத்தை பெற்றுக்கொண்டு வெறும் 15 நாளில் மருத்துவ படிப்புக்கான சான்றிதழை கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் போலி நீதிமன்றம், போலி அரசு அலுவலகம் வரிசையில் தற்போது போலி மருத்துவ வாரியம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “விஜய் முதலில் ஒரு கவுன்சிலர் ஆகட்டும்...” - திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கண்டனம்!