India

ஏழைகளுக்கான ஒரு திட்டத்தை உதாரணமாக சொல்ல முடியுமா? : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் சித்தராமையா சவால்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக ஏப்.26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இந்நிலையில், கல்புர்கி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷணாவை ஆதரித்து முதலமைச்சர் சித்தாராமையா பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதலமைச்சர் சித்தாராமையா, " கடந்த மக்களவை தேர்தலில் கல்புர்கி தொகுதியில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே தோல்வியடைந்தது அவருக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. அவரது தோல்வி மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெரும் இழப்பாகும். அதே தவறை இந்த முறை செய்ய வேண்டாம். வளர்ச்சிக்கு ஆதரவான காங்கிரஸ் வேட்பாளரை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் ஏழை மக்களுக்காகக் கொண்டுவந்த ஒரு திட்டத்தையாவது பிரதமர் மோடியால் உதாரணமாக சொல்ல முடியுமா?. மோடியும் அவரது கூட்டாளிகளும் நாட்டில் பொய்களை விதைத்து வருகிறார்கள். பா.ஜ.க என்பது பொய்களின் தொழிற்சாலை. பொய்கள் மூலம் மக்களை ஏமாற்றும் பா.ஜ.கவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பா.ஜ.க எம்.பிக்களின் கையாலாகாத்தனத்தால் அரசு வர வேண்டிய வறட்சியின் பங்கைப் பெற உச்சநீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் வறட்சி நிதி குறித்து நிர்மலா சீதாராமனும், அமித்ஷாவும் பொய்களை கூறி வருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”பேய்கள் எழுதிய அறிக்கை படித்தாரா” : ராஜ்நாத் சிங்கிற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ப.சிதம்பரம்!